ETV Bharat / state

காய்ந்து கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்குக - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

author img

By

Published : Aug 8, 2023, 9:51 PM IST

காய்ந்து கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும்
காய்ந்து கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும்

பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததன் எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த நேரடி விதைப்பும், நடவு செய்த நெற்பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகிறது. பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி 60.11 அடியாக சரிந்தது. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இருந்தே மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 154 கன அடியாக இருந்த நீர்வரத்து அடுத்து 131 அடியாக குறைந்தது. மேலும், அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. இன்று (ஆகஸ்ட் 8) 56.85 அடியாக நீர்மட்டம் குறைந்து வருகிறது.

தற்போது திறந்து விடும் தண்ணீரால் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கடைமடைப்பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. விவசாயம் பாதித்துள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் வீராவேசம்; டெல்லியில் கைகட்டி அடிமையாக இருப்பது ஏன்? - அன்புமணியை விமர்சித்த அமைச்சர்

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், " நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 2023 ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டபோது அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.

இந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து தற்போது 58 அடிக்கும் கீழ் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. பாசனத்திற்காக தண்ணீர் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கடைமடைப்பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இந்த நிலையில், குறுவை சாகுபடி செய்தநிலையில் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகிறது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் குறுவை சாகுபடிகள் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது அங்கு நெற்பயிர்கள் முற்றிலும் காய்ந்து கருகி விட்டது. அதே போல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகியப் பகுதிகளிலும் நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன.

இனிமேல் தண்ணீர் சென்றாலும் பயிர்களைப் பாதுகாக்க முடியாது. எனவே, மாநில அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர் அதிகாரிகள் மூலம் உரிய முறையில் ஆய்வு செய்திட வேண்டும். முற்றிலும் காய்ந்து கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத்தை உடனடியாக அறிவித்து வழங்கிட வேண்டும்.

மேலும் ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரையும் முழுமையாக கர்நாடக அரசு திறந்துவிட காவிரி நதிநீர் ஆணையம் உடனடியாக உத்தரவிட வேண்டும். மாநில அரசு தமிழகத்திற்கான தண்ணீரை பெறுவதற்கு அனைத்து விதமான சட்டநடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கான்கிரீட் கால்வாய் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய கீழ்பவானி பாசன விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.