ETV Bharat / state

அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 6:44 AM IST

Etv Bharat
Etv Bharat

Tamil Nadu DVAC: திண்டுக்கல்லில் மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "ஒன்றிய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும். 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர். 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக இன்று (01.12.2023) காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புயை பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதின் எதிரொலியாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளதாக தகவல் வெளியான நிலையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.