ETV Bharat / state

வரலாற்றில் முதல் முறை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! என்ன நடந்தது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 10:05 PM IST

vigilance officials raid at enforcement office: அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மதுரை : கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதே ஆண்டில் தான் அமலாக்கத்துறை அதிகாரியாக மத்திய பிரதேசத்தில் அங்கித் திவாரி பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 2023ஆம் ஆண்டு மதுரைக்கு அங்கித் திவாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மருத்துவர் சுரேஷ் பாபுவின் வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறிய அங்கித் திவாரி, வழக்கில் இருந்து அவரை காப்பாற்றுவதாக கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு மருத்துவர் சுரேஷ் ஒப்புக்கொள்ளாததால், கடைசியில் ரூ.51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டதாகவும், அதில் முதல் கட்டமாக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்ச ரூபாயை திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில், காரில் வைத்து மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மீதித் தொகையை நேற்று (நவ. 30) அங்கித் திவாரி மருத்துவரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து நேற்று (நவ. 30) திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரினைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி இன்று (டிச. 1) திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில், அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை மருத்துவர் வைத்துள்ளார்.

அப்போது அங்கித் திவாரி அந்த காரை எடுத்து செல்ல முயன்றபோது, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் எப்படியோ அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில், கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரைக் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்து அவரிடம் இருந்த 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இதனிடையே மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக வருகை தந்தனர்.

ஆனால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால், அவர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனுமதி கோரினர். இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் உள்ள வழக்கறிஞர்களும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

மேலும், முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இந்தோ-திபெத் துணை ராணுவ படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: அலட்சிய போக்கில் செயல்படுகிறதா திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையம்..? அமைச்சர் நடவடிக்கை எடுத்தும் தொடரும் பழையநிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.