ETV Bharat / state

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிக்கைக்கு எதிராக ஏ.கே.எஸ் விஜயன் கண்டன அறிக்கை

author img

By

Published : Jul 13, 2021, 12:48 PM IST

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிக்கைக்கு எதிராக ஏ.கே. எஸ் விஜயன் கண்டன அறிக்கை
அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிக்கைக்கு எதிராக ஏ.கே. எஸ் விஜயன் கண்டன அறிக்கை

அமைச்சர் பதவியை இழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது தன் துறை அலுவலரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த புகாரில், அமைச்சர் பதவியை இழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியும், மாநில திராவிட முன்னேற்றக்கழக விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ் விஜயன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காமராஜ் கமிஷன்:

அதில், 'தமிழ்நாட்டைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக, விவசாய உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டுவரும் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கொள்முதல் செய்யப்படும் பொருள்களுக்கு கமிஷன் பெறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருந்தது.

அந்த கமிஷன் தொகைக்கு உணவுத்துறை அமைச்சர் 'காமராஜ் கமிஷன்' தொகை எனப் பகிரங்கமாகப் பெயர் வைத்து இருந்ததையும் டெல்டா பகுதி விவசாயிகள் அனைவரும் நன்கு அறிவர்.

இதை மறந்து நெல்லையில் வேளாண் அலுவலர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்டு அமைச்சர் பதவியை இழந்த அதிமுக விவசாயப்பிரிவுச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி புரிதல் இல்லாத அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளிடம் கமிஷன் பெற்ற முன்னாள் அமைச்சர்:

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் வாரக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டன .

அதனால் மாநிலத்தில் பல இடங்களில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழையில் நனைந்த நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே முளைத்து வீணானதைக் கேள்வியுற்ற ஸ்டாலின், எங்களுக்கு ஆணையிட்டதன்படி நாங்கள் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திற்கும் சென்று ஆய்வுசெய்து அதனைத் தடுக்க அதிமுகவிற்கு வலியுறுத்திப் போராட்டம் செய்தோம்.

அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தன் சொந்த மாவட்டத்திலேயே நடந்த இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல், விவசாயிகளைச் சந்திக்காமல் நெல்மூட்டை ஒன்றுக்கு நாற்பது ரூபாய் விவசாயிகளிடம் கமிஷன் பெறுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருந்தார்.

காவேரி மீட்புப் பயணம்:

டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்திப் பொருள்கள் வீணாகக் கூடாது என்பதற்காக இல்லாமல் கமிஷனுக்காகவே பல கோடிகள் செலவில் பல சேமிப்புக் கிடங்குகளைக் கட்டிப் பயன்படுத்த முடியாத நிலையில் வைத்ததோடு பெயரளவில் தூர்வாரும் பணி என அறிவித்து தூர்வாரப்படாமல் ஆண்ட அதிமுக-வைப் போன்றவர்கள் அல்ல, நாங்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக விவசாயப்பிரிவுச் செயலாளரும் புரிந்துகொள்ள வேண்டும்.

"நமக்கு நாமே பயணம்'', ''காவேரி மீட்புப் பயணம்” எனத் தொடர்ந்து விவசாய ஆதரவுப் பேரணிகளை நடத்தியும், விவசாயப் பிரதிநிதிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டம் எனத் தொடர் விவசாய ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஸ்டாலின், விவசாயிகளுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதனை திமுக ஆட்சியில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை:

பொதுமக்களின் பாராட்டினைப் பெறும் வகையில் வேளாண் பாசன வசதிக்கு என முறை, பாசன மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி, கழக ஆட்சியின் தொடர் சாதனையான ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு, முறைப்படி தூர்வாரப்பட்டதால் கடைமடை பகுதிவரை விவசாயப் பயன்பாட்டிற்குத் தண்ணீர் சென்று சேர்ந்த சிறப்பு, முதலைச்சரின் சிறப்பு குறுவை சாகுபடித் திட்டம் என இப்படிப் பல அரிய திட்டங்களை, பொறுப்பேற்ற முதல் இரண்டே மாதங்களில் செய்துவரும் முதலமைச்சரின் சாதனைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற அதிமுகவினர் அறைக்குள் உட்கார்ந்துகொண்டே அறிக்கைவிடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இப்படி அடுக்கடுக்கான தவறுகளையும், விவசாய விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அதிமுக ஆட்சியின் அவலங்களை எல்லாம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல மறைத்து, இரண்டே மாத திமுக ஆட்சிக் காலத்தில் அத்தனையும் சரி செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பதுவே, நீங்களே திமுக ஆட்சியின் மீதும் முதலமைச்சர் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது.

ஆட்சியர்களுடன் கூட்டம்:

எதிர்பாராத மழையின் காரணமாகச் சில இடங்களில் நெல்லுக்குச் சேதம் ஏற்படுகின்றது என்று தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்தவுடனே முதலமைச்சர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரையும், உணவுத்துறை அமைச்சரையும் தலைமைச்செயலாளரையும் அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி வாயிலாகக் கூட்டத்தை நடத்தி இதற்குத் தீர்வுகாண வலியுறுத்தினார்.

அதன்படி நெல் அதிகம் விளையும் 19 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் உடனடியாகக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் நெல் மழையில் நனைதல் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நெல் கொள்முதல், பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கு மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இது போன்று விவசாயிகளின் பிரச்னைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் அரசுதான் முதலைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு என்பது விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும்.

தவறு எங்கு நடந்தது என்று குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தும் குறிப்பிட்டுக் கூறாத போலி விவசாயிக்கும் அதிமுக விவசாய அணிச்செயலாளருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் இனிமேலாவது அரசியலுக்காக அறிக்கை விடாமல் மக்கள் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிடுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்- ராம. திருச்செல்வம் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.