'வாழ்க தமிழ்நாடு..வளர்க பாரதம்' தமிழில் கூறி உரையை முடித்த ஆளுநர்

author img

By

Published : Jan 25, 2023, 8:45 PM IST

Etv Bharat

அண்மையில் சட்டப்பேரவையில் 'தமிழ்நாடு' என உச்சரிக்க மறுத்ததாக, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 'வாழ்க தமிழ்நாடு' எனவும் 'வளர்க பாரதம்' எனவும் வாக்காளர் தின நிகழ்ச்சியில் தமிழில் கூறி, தனது உரையை முடித்துள்ளார்.

வாக்காளர் குறிப்பேடு வெளியீடு
வாக்காளர் குறிப்பேடு வெளியீடு

சென்னை: 'வாழ்க தமிழ்நாடு' எனவும் 'வளர்க பாரதம்' எனவும் வாக்காளர் தின நிகழ்ச்சியில் தமிழில் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முடித்துள்ளார்.

13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி(13th National Voter's Day), "வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.25) நடைபெற்றது.

"வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு

வாக்காளர் குறிப்பேடு: இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய சிடி, பாக்கெட் சைஸ் வாக்காளர் குறிப்பேடு ஆகியவற்றை வெளியிட்டார். மேலும், தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு உள்ளிட்டப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு விருது வழங்கியும், வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுத்தொகையை வழங்கியும் சிறப்பித்தார்.

பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாடு தேர்தல் ஆணைய பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளனர். நாட்டில் ஜனநாயகத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு மிக முக்கிய பங்காக இருப்பது வாக்காளர்களே. 940 மில்லியன் வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலை நடத்துவது என்பது மிக கடினமான ஒரு வேலை. ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதனை சிறப்பாக செய்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் விகிதம்: இவிஎம் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியபோது, சிலர் ஆதரித்தனர். பலர் எதிர்த்தனர். இந்திய தேர்தல் ஆணையம் அதன் உண்மைத்தன்மையை நிரூபித்தது. பல முன்னேறிய நாடுகளுக்கு இந்த முறை முன்னுதாரணமாக உள்ளது. கடந்த 3-லிருந்து 4 நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து அரசை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. பிற தேர்தல்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இளைஞர்களின் சக்தி அதிகமாக உள்ளது. இந்திய அரசியலில் மாற்றத்தை தீர்மானிக்க கூடியவர்களாக உள்ளனர். 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதுபோல, நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. 2047-ல் இந்தியா உலக நாடுகளின் தலைவராக உயரும். நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு பிற நாடுகள் உற்று நோக்கும் வகையில் உள்ளது. உலக பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் நாடாகவும் உள்ளது.

ஆளுநர் உரை - 'வாழ்க தமிழ்நாடு': இந்தியத் தேர்தலில் இளம் பெண்கள் வாக்களிக்க இந்திய அரசு அளித்த உரிமையானது மாபெரும் ஜனநாயக வெற்றி. இந்த நாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பதில் வாக்காளர்களின் வாக்கு என்பது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ''நன்றி! வாழ்க தமிழ்நாடு..வளர்க பாரதம்.."என ஆளுநர் உரையை முடித்தார்.

'வாழ்க தமிழ்நாடு..வளர்க பாரதம்' தமிழில் கூறி உரையை முடித்த ஆளுநர்
'வாழ்க தமிழ்நாடு..வளர்க பாரதம்' தமிழில் கூறி உரையை முடித்த ஆளுநர்

இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலர் இறையன்பு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பணியில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டமைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தர்மபுரி ஆட்சியர் சாந்தி மற்றும் தென்காசி ஆட்சியர் ஆகாஷ் ஆகியோருக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: பிறகட்சிகளை குற்றம் சொல்ல திருமாவுக்கு தகுதியில்லை - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.