சென்னை: கடந்த காலங்களில் சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் அரசு நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கான மாற்று முறையை மேற்கொள்ளலாம் என தடுமாறி வந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டு, நீரியல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து 'மழை நீர் சேமிப்பு' என்ற திட்டத்தை அமல்படுத்தினார்.
பின்னர் இத்திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த மழை நீர் சேமிப்புத் திட்டம், தொடக்கத்தில் சென்னை வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் மக்கள் படிப்படியாக இத்திட்டத்தை அமல்படுத்த தவறி விட்டனர் என்கின்றனர் நீரியல் நிபுணர்கள்.
இத்திட்டத்தை கண்காணிக்கும் துறையான சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனை உணர்ந்து கொண்டு சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், அனைத்து சென்னை வாசிகளுக்கு இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்குமாறு மண்டல வாரியாக ஊழியர்கள் மூலம் எடுத்துரைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னை வாசிகள் இந்த தொட்டிகளை அமைக்க உதவி தேவைப்பட்டால் மாநகராட்சி ஊழியர்களை அணுகி, மழைநீர் சேகரிப்பு என்ற அமைப்பின் மூலம் தங்களுக்கான தொட்டிகளை அமைத்து கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து குடிநீர் வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "மழை பெய்யாமல் அல்லது தண்ணீரை சேமிக்காமல் வீணாக்குவதால் நிலத்தடிநீர் மட்டம் குறைகிறது.
இந்த நிலத்தடி நீர் மட்டத்தை செயற்கை முறையில் உயர்த்த நாம் சாதாரண நாட்களில் உபயோகிக்கும் தண்ணீர் வீணாகும்போது, அதை நீர் தேங்கக்கூடிய பகுதிகளில் தொட்டிகள், குழிகள் மற்றும் கிணறுகளுக்குள்ளே சென்றடையும்படி நீர் வழியை ஏற்படுத்த வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்” என கூறினார்.
தொடர்ந்து மழைநீர் சேகரிப்பின் தலைவர் சேகர் ராகவன், “மழைக் காலங்களில் மழை நீர் தானாகவே இந்தத் தொட்டிகளில் சேகரிக்கப்படுவதால், நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயரும்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீரேற்றி, குடிநீர் விநியோகம் செய்யலாம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது, நிலத்தடி நீர் கைகொடுத்திருக்கிறது என்றே கூறலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மழை நீர் வடிகால் பணிகளில் குறை சொல்ல பலர் துடிக்கின்றனர்’ - தயாநிதி மாறன்