ETV Bharat / state

'சீமாங்' மையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:12 PM IST

சீமாங் மையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை
சீமாங் மையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

மகப்பேறு இறப்புகளை குறைப்பதற்கு சீமாங் மையத்திற்கு 7 மகப்பேறு மருத்துவர்கள், 7 மயக்க மருத்துவர்கள் மற்றும் 7 குழந்தைகள் நல மருத்துவர்களை பணியில் நியமிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சீமாங் மையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

சென்னை: மகப்பேறு இறப்புகளை குறைப்பதற்கு சீமாங் மையத்திற்கு 7 மகப்பேறு மருத்துவர்கள், 7 மயக்க மருத்துவர்கள், 7 குழந்தைகள் நல மருத்துவர்களை பணியில் நியமிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன், மாநில செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கூறுகையில், “மகப்பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்புகள் ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருவதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் சுக பிரசவங்களில் 42 தாய்மார்கள் இறப்பு நிகழ்கிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது ஐந்தாம் இடத்தில் இருக்கிறோம். எனினும், தாய்மார்கள் இறப்புகள் இன்னும் வேகமாக குறைத்து பல குடும்பங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகப்பேறு பிரசவங்களை, அனைத்து வசதிகள் கொண்ட சீமாங் நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே நிகழ்த்த வேண்டும். அனைத்து சீமாங் மையங்களிலும், தேவையான எண்ணிக்கையில் 7 மகப்பேறு, 7 மயக்கவியல் மற்றும் 7 குழந்தைநல மருத்துவர்கள் நியமனமும், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பணி அமர்த்தவும் வேண்டும்.

மகப்பேறு இறப்புகளை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். எவ்வாறு இறப்புகளை தடுக்கலாம் என்று அறிவியல் பூர்வமாக மகப்பேறுத்துறை, துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும். மதுரை மாவட்ட கலெக்டர் அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த மகப்பேறு இறப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதை எதிர்கிறோம்.

உண்மை நிலை அறிய இயக்குனர் தலைமையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். மாநில அளவில் அமைக்கப்பட்ட குழுவில் அரசு மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் FOGSI (Federation of Obstetric and Gynaecological Societies of India) அமைப்பையும் சேர்க்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருந்தாலும், அங்கு பிரசவம் பார்க்காமல், சீமாங் மையங்களில் பிரசவத்திற்கு தாய்மார்களை அனுப்ப வேண்டும். அப்போது தான் அவசரமாக தேவைப்படும் அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும். தற்பொழுது ஆம்புலன்ஸ் வசதிகள் அதிகளவில் இருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களை, சீமாங் மையம் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

ஆரம்ப சுகாதர நிலையங்களில் நோயினை மட்டுமே கண்டறிய முடியும். அதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சை மாவட்ட அல்லது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் அளிக்கப்படுகிறது. பொது மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தேவையான மகப்பேறு மருத்துவர்களை மக்கள் தொகைக்கு ஏற்ப நியமனம் செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழக அரசு பயிர் காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.