ETV Bharat / state

ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு: நிபந்தனையை தளர்த்தி உத்தரவு!

author img

By

Published : Apr 25, 2022, 9:02 PM IST

ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு

நில அபகரிப்பு வழக்கில் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ் குமாருக்குமான பிரச்னையில், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், அதன் பின்னர் திங்கட்கிழமைதோறும் விசாரணை அலுவலர் முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியிருந்தது.

இதன்படி ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் வாரந்தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

200 பேருடன் செல்வது ஏன்? இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று( ஏப்ரல் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் ஆஜராகி, ஜெயக்குமார் வாரந்தோறும் ஆஜரானாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, நிபந்தனைகளைத் தளர்த்த ஆட்சேபனை தெரிவித்தார்.

அப்போது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, திருச்சியிலும், சென்னையிலும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுவதாகவும், மருமகன் தொடர்பான விவகாரத்தில் அவரிடம் விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல் துறை முன்பு ஆஜராக செல்லும்போது 200 பேருடன் செல்வதை செய்திகளில் பார்ப்பதாகவும், அவ்வாறு செல்வது ஏன் எனக் கேள்வி எழுப்பி, விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரட்டை வேடம் போடும் திமுக : ஓபிஎஸ் குற்றச்சாட்டு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.