ETV Bharat / state

திருமண மண்டப முன்பதிவு தொகை வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Oct 15, 2020, 10:12 PM IST

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

சென்னை: திருமண மண்டப முன்பதிவு தொகையை உரியவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்த அரசு, மார்ச் 16ஆம் தேதிக்கு முன் திருமணங்களுக்கு மண்டபங்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் திருமணம் நடத்தி கொள்ளலாம் எனவும், அதன் பின் முன் பதிவு செய்து, திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தால், முன் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அரசாணை பிறப்பித்திருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், மண்டபத்தை பராமரிப்பது, மண்டபத்தை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் உள்ளதால் ரத்தான திருமணங்களுக்கான முன்பதிவு தொகையை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்க நிர்பந்திக்க கூடாதெனவும், தற்போதுள்ள சூழலை கருத்தில்கொண்டு ஊரடங்கு காலத்திற்கான சொத்து வரியை ரத்து செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டப முன்பதிவு பணத்தை திருப்பிக் கொடுப்பதென்பது சிவில் விவகாரமென்பதால், அதில் காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர்கள் தலையிட தடை விதிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தபோது, அரசாணைப்படி முன்பனத்தை திருப்பி செலுத்த வேண்டியது மண்டப உரிமையாளர்களின் கடமை எனவும் இதில் காவல்துறை தலையிடக்கூடாது என கோருவது ஏற்புடையதல்ல எனவும் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தர் வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படியும், அக்டோபர் மாதம் பிறப்பித்த ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பையும் தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.