ETV Bharat / state

பிரியா மரணம்: மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

author img

By

Published : Nov 18, 2022, 11:06 PM IST

மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு முன் ஜாமின் மறுப்பு
மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு முன் ஜாமின் மறுப்பு

கால்பந்தாட்ட மாணவி ப்ரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: கால்முட்டியில் ஏற்பட்ட ஜவ்வுகிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான ப்ரியா, பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

பெரியார் நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15-ம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனால், முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர்கள் தரப்பில், ’ப்ரியாவின் அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு அறுவை சிகிச்சை செய்தேன். இருவரும் நன்றாக உள்ளனர். குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. சரணடைவதற்கு காவல் நிலையத்திற்கு செல்வதே ஆபத்தாக உள்ளது. நூற்றுக்கணக்கான மிரட்டல் வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ’அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விட்டேன் என மருத்துவர்கள் எப்படி கூற முடியும் தற்போது தான் சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடத்த காவல்துறைக்கும் சிறிது அவகாசம் வழங்க வேண்டும். உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும். மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது’ என அறிவுறுத்திய நீதிபதி, ’உங்களுக்கு எந்த நிவாரணமும் தற்போது வழங்க முடியாது. வேண்டுமானால் சரணையடையுங்கள்’ எனத் தெரிவித்த நீதிபதி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பிரியா மரண விவகாரம்: கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.