ETV Bharat / state

குண்டாசில் இருந்து தப்ப முடியுமா சவுக்கு சங்கர்? -சட்டம் சொல்வது என்ன? - SAVUKKU SHANKAR Goondas case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 12:33 PM IST

savukku Shankar case latest update: சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில். அதிலிருந்து அவர் தப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்யராஜ் ராஜமாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர் கோப்புப்படம்
சவுக்கு சங்கர் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது முதல் சிஎம்டிஏ திட்டம் குறித்த போலி ஆவணங்கள் குற்றச்சாட்டு வரை 8 வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது. பொதுவாக அடிதடி, கொலை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்கியூஸ்ட்கள் மீது குண்டாஸ் போடப்படும். ஆனால், சோசியல் மீடியாவில்அவதூறாக பேசி கைதானவர் மீதும் குண்டாஸ் போட முடியுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்தியராஜ் ராஜமாணிக்கம் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார்.

வழக்கறிஞர் சத்தியராஜ் ராஜமாணிக்கம் கூறியதாவது:

பொதுவாக ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் மீது மேலும் வழக்குகள் அதிகமாகும்பட்சத்தில் எதிர்கால குற்ற செயல்களை தடுக்க, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்படும். மேலும், அந்த நபர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலோ, போதைப் பொருள் குற்றவாளிகளாக இருந்தாலோ, சைபர் குற்றவாளிகளாக இருந்தாலோ பாலியல் குற்றவாளிகளாக இருந்தாலோ அவர மீது குண்டர் தடுப்புச் சட்டம் போட முகாந்திரம் உள்ளது...

சவுக்கு சங்கரை பொறுத்தவரை, கடந்த 2022 ஆம் ஆண்டே நீதித் துறை குறித்து அவதூறாக பேசி ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றவர். இந்நிலையில் தற்போது பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதாகியுள்ளார். மேலும், அவர் கைதான பிறகு கஞ்சா வழக்கு, சைபர் குற்றம், சிஎம்டிஏ விவகாரம் உட்பட 8 க்ரைம் நம்பர்கள் அடுத்தடுத்து அவர் மீது பதிவாகியுள்ளதால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முகாந்திரம் இருந்துள்ளது.

சவுக்கு சங்கர் மீது மீடியா வெளிச்சம் இருப்பதால் இது பெரிதாக பார்க்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டும், மேற்குரிய குற்றங்களை செய்யும் எந்தவொரு சாதாரண மனிதர் மீதும் குண்டர் சட்டம் போட முடியும்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியுமா?

குண்டர் சட்டத்தில் ஜாமீன் கேட்டு நேரடியாக கோர்ட்டுக்கு போக முடியாது. கைது நடவடிக்கை சரியானதா என்பதை நீதிபதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு முடிவு செய்யும். குழு நிராகரித்த பிறகும், ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். அவர் மீது குண்டர் சட்டம் முடிவு செய்யப்பட்டால், குற்றவாளி 12 மாதங்கள் வரை சிறைந்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மேலும், இந்த சட்டத்தின்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டு, சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டு, அந்த நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைந்தண்டனை விதிக்கப்படும். ஒருவேளை, குண்டாஸ் வழக்கில் அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களில் அவருக்கு தொடர்பு இல்லை என்று தெரிய வந்தால் குண்டாஸ் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. அப்படி பலர் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது'' என வழக்கறிஞர் சத்தியராஜ் ராஜமாணிக்கம் கூறினார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு... பின்னணியில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.