ETV Bharat / state

2 நாள் பயணமாக சென்னை வரும் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 4:04 PM IST

இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

president visit chennai: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாட்கள் பயணமாக நாளை (அக்.26) சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (அக்.26) மாலை, பெங்களூரில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலைய பழைய முனையம் வர இருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். பின்னர் அடுத்த நாள் (அக்.27) காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகையில் சில முக்கிய பிரமுகர்களை குடியரசுத் தலைவர் சந்திக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு நடைபெறும் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். காலை 10:15 முதல் 11:15 வரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து, 11:55 மணி அளவில் விமான நிலையம் திரும்புகிறார்.

அங்கு தமிழ்நாடு அரசு சார்பில், குடியரசு தலைவருக்கு வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது இரண்டு நாள் தமிழக சுற்றுப்பயணித்தை முடித்துவிட்டு, பகல் 12:05 மணி அளவில் இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக குடியரசு தலைவர் சென்னை வருவதை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.

விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, குடியரசுத் தலைவரை வரவேற்க வருபவர்களுக்கு பாஸ் வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் தனி விமானம் வந்து நிற்கும் இடம், குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கும் பகுதி, கிண்டி ராஜ்பவனுக்கு செல்லும் சாலை ஆகிய இடங்களில் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று (அக்.25) காலை 11:30 மணி அளவில், சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகை வரையும், பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரையிலும், பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

மேலும், சென்னை விமான நிலைய வளாகம் முழுவதும் இன்று முதல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (அக்.27) மாலை வரையில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வெள்ளை மாளிகை தேசிய விருது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.