ETV Bharat / state

தமிழகம் வந்த அமித்ஷா.. திடீர் மின்தடையால் பாஜகவினர் சாலை மறியல்

author img

By

Published : Jun 11, 2023, 8:07 AM IST

மின்தடையினால் பாஜகவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்
சென்னை வந்த அமைச்சர் அமித்ஷா

மத்திய அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் சென்னை வந்ததைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் சாலை மறியல் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை வந்த அமைச்சர் அமித்ஷா

சென்னை: பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் விதமாக பாஜக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தின் மூலம் இரவு 9.28 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.

இவ்வாறு தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பல்வேறு பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். வேலூருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 200 போலீஸார், துணை ராணுவம் உள்பட ஆயிரத்து 400 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பின் முன்னேற்பாடாக வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

முக்கியமாக, அமித்ஷாவை வரவேற்பதற்கு சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி உள்ளிட்ட 12 நபர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இவர்களில் சிலர் விமான நிலையத்திற்கு வராமல், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் வரவேற்க நின்று விட்டனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து காரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலைய ஆறாம் எண் கேட் வழியாக வெளியில் வந்தார். அங்கு ஜிஎஸ்டி சாலையின் இரு பகுதிகளிலும், பாஜக தொண்டர்கள் கொடிகளுடன் திரண்டு நின்று, வாழ்த்து கோஷமிட்டனர். இதனையடுத்து அமித்ஷா காரில் இருந்து கீழே இறங்கி, சாலையில் சிறிது தூரம் நடந்தபடி தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தார்.

அப்போது போலீஸ் தடுப்பையும் மீறி, தொண்டர்கள் பலர் சாலைகளில் வந்து அமித்ஷாவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்பு அமித்ஷா மீண்டும் காரில் ஏறி கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே அமித்ஷா காரில் ஏறி புறப்படப்போகும் நேரத்தில், விமான நிலையத்திற்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

அமித்ஷா அதை பொருட்படுத்தாமல், காரில் ஏறி கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். ஆனாலும், பாஜக தொண்டர்கள், ”எங்கள் தலைவர் வரும்போது வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்தி, ஒரு இருளான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டனர்” என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் அமைதிப்படுத்தி, ”இன்று மாலையில் பலத்த சூறைக்காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து விட்டது. இதனால் தான் மின்தடை ஏற்பட்டது. இது தற்செயலாக ஏற்பட்டது தான்” என்று பாஜகவினரிடம் கூறினர்.

ஆனாலும் பாஜகவினர் அதை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. இதனையடுத்து பாஜகவினர் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: '9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் சிறப்பு திட்டங்களை பட்டியலிடுக' - அமித்ஷாவிற்கு சவால் விட்ட ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.