காதலர்களை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறித்த கும்பல்..! வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம்!

காதலர்களை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறித்த கும்பல்..! வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம்!
ECR Copper beach: பனையூரில் காப்பர் பீச்சில் காதலர்களை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறித்த வழக்கில் பனையூரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள பனையூர் பகுதியில் இருக்கும் காப்பர் கடற்கரையில் (Copper Beach), இரவு நேரத்தில் காதல் ஜோடி ஒன்று உரையாடிக் கொண்டிருந்து உள்ளது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், கடற்கரையில் அமர்ந்திருந்த காதலர்களை மிரட்டி பணம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், காதலர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த மர்ம நபர்கள் காதலர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காதலனுக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் காதலர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதை அடுத்து, வேறு வழியில்லாமல் ஜிபே (Gpay) மூலம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், பாதிக்கப்பட்ட காதலர்கள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்... பயிற்சி மாணவர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!
அப்போது, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஜிபே மூலம் பணம் அனுப்பிய விவரங்களை சேகரித்து விசாரித்ததில், மிரட்டி பணம் பெற்றது பனையூரைச் சேர்ந்த கன்னியப்பன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட கன்னியப்பன் மற்றும் விஜய் ஆகியோர் மீது ஏற்கனவே, இதே போன்று காதலர்களை மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப் பதிவாகி செய்து இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.
