சென்னை: வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டு, திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றபின், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்கிடையே வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் (மார்ச் 31) தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 % இடஒதுக்கீடு அளித்தது செல்லாது. இடஒதுக்கீடு அளிப்பதில் அறிவியல் முறை பின்பற்றப்பட வேண்டும்’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு அளித்து அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அரசாணையும் ரத்து ஆகிறது.
நம்மால் 33 ஆண்டுகள் பலன் பெற்றவர்கள்: இந்த நிலையில், சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (ஏப்ரல்.2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "செயற்குழு கூட்டத்திற்குப் பெண்கள் குறைந்த அளவிற்கு வந்துள்ளனர். பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க வேண்டும். கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி 10.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். ஒட்டுமொத்த வன்னியர்களுக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைச் செய்வார் என எதிர்பார்க்கிறேன். முதலமைச்சர் இதற்கான பணிகளை விரைந்து செய்து முடிப்பார். மொத்தமுள்ள 20% உள் ஒதுக்கீட்டில் 10.5% போக மீதமுள்ள 2.5%, 7% இருப்பவர்கள் ஒன்று சேர்ந்து நமக்கு எதிராக மாறிவிட்டனர். நம்மால் 33 ஆண்டுகள் பலன் பெற்றவர்கள், தற்போது எதிராகத் திரும்பியுள்ளனர்.
முதலமைச்சரை பயமுறுத்த வேண்டாம்: டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஓ.சி பிரிவில் யார் யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று இருக்கிறது என முதலமைச்சர் எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் வன்னியர்களுக்கு எவ்வளவு கிடைக்கப்பெற்றது எனப் பார்க்க வேண்டும். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை ஊக்குவிப்போம். 10.5% இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் போராட்டத்திற்கு அவசியமில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் துடிப்புடன் இருக்கிறார். இப்போதே போராட்டம் எனக் கூறி முதலமைச்சரை பயமுறுத்த வேண்டாம்" என ராமதாஸ் கூறினார்.
வன்னியர்கள் முன்னேறக் கூடாது: அதனைத்தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு ஒரு கேடு வந்துவிட்டது. 69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து வந்துள்ளது. இதை மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் தான் சரி செய்ய முடியும். காரியம் வேண்டுமா?, வீரியம் வேண்டுமா?, எனக் கேட்டால் தற்போது எனக்குக் காரியம் தான் வேண்டும். காரியம் ஆகவில்லை எனில் வீரியம் தானாகவே வந்துவிடும்'' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ''இட ஒதுக்கீடு 27% வாங்கி கொடுத்தது மருத்துவர் ஐயா அவர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. புள்ளி விவரங்களும், தரவுகளும் சரியாக இல்லாததால் 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வன்னியர்கள் முன்னேறக் கூடாது, மதுவை அருந்தி வாழ்க்கை வீணாகப் போக வேண்டும் என நினைப்பது தான் தமிழ்நாட்டின் சமூகநீதியின் நிலைமை.
போராடத் தயார் நிலையில் இருக்க வேண்டும்: ஒரே வாரத்தில் சரியான புள்ளி விவரங்களைத் தயார் செய்து விடுவேன். முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆர்வமாக உள்ளனர். போராட்டத்திற்கு அவசியமில்லை. அமைதியாக இருப்போம். தேக்க நிலை என்றால் போராடத் தயார் நிலையில் இருக்க வேண்டும். இது வன்னியர்கள் பிரச்னை இல்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பிரச்னை. அரசியல் ரீதியாக யாரும் வாய் திறக்கவில்லை.
மேலும், தந்தை பெரியாரின் வாரிசு எனச் சொல்லிக்கொண்டு, சமூகநீதியைப் பற்றி மட்டும் பேச மறுக்கின்றனர். 10.5% இட ஒதுக்கீட்டில் இருந்து இன்னும் அதிகமாகக் கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இதைச்செய்வார் என நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், இன்று நடைபெற்ற பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம்'- அமைச்சர் சேகர் பாபு