ETV Bharat / state

அரசாணை 149ஐ ரத்து செய்துவிட்டு தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

author img

By

Published : Dec 29, 2022, 12:14 PM IST

Updated : Dec 29, 2022, 2:28 PM IST

அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வா? என கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

ஒரு பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது சமூக அநீதி என்பதால், ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த முடிவு பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடப்பது குறித்தும், அதனால் ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் காலியாகவே நீடிப்பதையும் சுட்டிக்காட்டி, கடந்த 26ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டில் ஆசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனால், 6,553 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்துவது சமூக அநீதி என்பதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன.

ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதற்கான தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதியை உறுதி செய்வதற்காகத்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

அத்தகைய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்? அது எந்த வகையில் சமூக நீதி ஆகும்? இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முரண்பாடு என்னவென்றால், தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்காக தகுதித் தேர்வை நடத்துவதும் ஆசிரியர் தேர்வு வாரியம்தான்.

போட்டித் தேர்வை நடத்துவதும் ஆசிரியர் தேர்வு வாரியம்தான். இரு தேர்வுகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான். ஒரு பணிக்கு ஒரே மாதிரியான இரு தேர்வுகளை, ஒரே பிரிவினருக்கு, ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒரே அமைப்பு நடத்துவதை விட முரண்பாடான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி, 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு எழுந்தாலும், பின்னர் தகுதித்தேர்வு நடைமுறைக்கு வந்தது. 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை.

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை திணித்தது.

அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர் ஆவார். ஆனால், ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை. அதற்கு அவர் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முந்தைய அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணை. அப்போது இந்த அரசாணையை பாட்டாளி மக்கள் கட்சிதான் மிகக் கடுமையாக எதிர்த்தது.

இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனாலும், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த வரை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்கான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

2018ஆம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனால், அரசாணை எண் 149 ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், முந்தைய அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை கொஞ்சமும் மாற்றாமல் செயல்படுத்த திமுக அரசு தயாராகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை.

அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித் தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்றால், அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் பணம் படைத்த, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைப்பதற்கு போட்டித் தேர்வு வகை செய்கிறது. அதனால்தான் இதை சமூக அநீதி என பாமக விமர்சிக்கிறது.

எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போராட்டத்தின்போது 46 இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம்

Last Updated :Dec 29, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.