ETV Bharat / state

பொங்கல் விடுமுறை; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:59 AM IST

Etv Bharat
Etv Bharat

Pongal Holidays: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக மக்கள் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறைக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கும்பகோணம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

அதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் என ஆண்டுதோறும் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஜன.14, 15 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில், சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் செந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பேருந்து, ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகிறது. அதேநேரம், பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (ஜன.13, 14) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மேலும், தற்போது கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கபட்டதால், மக்கள் அதிக அளவில் ரயில்களில் பயணிப்பதாக தெரிகிறது.

அதே போன்று சென்னை சென்டரல் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாக இருந்து வருகிறது. வெளிமாநிலங்கள் மற்றும், சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர் சென்டரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகாமக காணப்படுகிறது.

முன்னதாக, பொங்கல் பண்டிகை வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தாம்பரம் - கோயம்புத்தூர், பெங்களூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், முன்பதிவில்லாத ரயில் உள்ளிட்ட 3 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஜன. 14, 16-ஆம் தேதியும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜனவரி 15,17-ஆம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.