ETV Bharat / state

BE. BTech Counselling : பிஇ., பி.டெக். 2வது சுற்று கலந்தாய்வு நிறைவு.. 1 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:06 PM IST

BE and BTech second consultation
பிஇ பிடெக் 2 ம் சுற்று கலந்தாய்வு

நடப்பாண்டிற்கான பி.இ மற்றும் பி.டெக் படிப்பில் சேருவதற்கு 2ஆம் சுற்றில் விருப்பப் பதிவு செய்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் 56 ஆயிரத்து 837 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்விற்கு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில், 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 783 இடங்கள் நிரப்பட உள்ளன.

அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 12 ஆயிரத்து 59 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் 2ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தனர். பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் 22 ஆயிரத்து 762 ஆவது இடம் தொடங்கி, 87 ஆயிரத்து 49 வரையில் உள்ள 64 ஆயிரத்து 332 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

முதல் கலந்தாய்வில் பங்கேற்ற பின்னர் 2ஆம் சுற்று கலந்தாவிற்கு 6 ஆயிரத்து 783 தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 49 ஆயிரத்து 719 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்திருந்தனர். அதில் 45 ஆயிரத்து 816 மாணவர்களுக்கு கல்லூரியில் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 35 ஆயிரத்து 474 மாணவர்களுக்கு இறுதியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசை பட்டியலில் 1075 முதல் 8 ஆயிரத்து 586 வரை உள்ள 7952 மாணவர்களும், முதல் சுற்று கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்யாமல் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் 279 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் 6 ஆயிரத்து 632 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ததில், 6 ஆயிரத்து 116 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதில் 5 ஆயிரத்து 267 மாணவர்களுக்கு இறுதியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் சுற்று மற்றும் 2ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் பொதுப் பிரிவில் 50 ஆயிரத்து 615 இடங்களும், அரசுப்பள்ளி மாணவர்கள் 6 ஆயிரத்து 222 பேருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு சுற்று முடிவு கலந்தாய்வு நடைபெற்ற முடிந்துள்ள நிலையில், இன்னும் சுமார் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பி.இ., பி.டெக். இடங்களை தேர்வு செய்வதற்கான மூன்றாம் சுற்று விருப்பப்பதிவு நாளை துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.