ETV Bharat / state

12 மணி நேர வேலை மசோதா: பன்னாட்டு முதலாளிகளுக்காக நவீன காலத்தில் பணிச்சுமையை அதிகரிப்பதா? - மநீம காட்டம்

author img

By

Published : Apr 22, 2023, 10:45 PM IST

Etv Bharat
Etv Bharat

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் திருத்தம் கோரும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியது, நவீன தொழில்நுட்ப காலத்தில் பணி நேரத்தை அதிகரிப்பது பன்னாட்டு முதலாளிகளுக்காகவே என்றும் அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை: தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

விருப்பம் அடிப்படையில் 12 மணி நேர வேலை 3 நாட்கள் விடுமுறை தொடர்பான மசோதா நேற்று(ஏப்.21) சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதிமுக சார்பாகவும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு மக்கள் நீதி மய்யமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அம்பேத்கரால் 8 மணி நேர வேலை உரிமை: இது தொடர்பாக மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் செய்தி குறிப்பில், 'உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோரின் உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்தது. 1945-ல் இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை டாக்டர் அம்பேத்கர் பெற்றுத் தந்தார்.

6 மணி நேரமாக்க எண்ணிய கருணாநிதி: என்தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

தொழிலாளர் உரிமையை பறிக்காதே: வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரக் கருதி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது.

பணிநேரம் குறைய வேண்டுமே தவிர கூடக்கூடாது: ஏற்கெனவே, தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே, மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம்.

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறு: லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல" என குறிப்பிட்டுள்ளார். எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோயபல்ஸ் ஆட்சி.. தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் மசோதா.. 12 மணி நேர வேலை குறித்து ஈபிஎஸ் விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.