ETV Bharat / state

“திராவிடம் என்றால் என்ன? என்று சிலரைக் கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம்” - மு.க.ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:02 PM IST

திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் இன்று (அக்.27) திமுக வழக்கறிஞரான புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என்.புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் இன்று (அக்.27) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

திமுக வழக்கறிஞரான புருஷோத்தம் இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு இயக்கப் பணிகளை எப்படியெல்லாம் ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை அவரை அறிந்தவர்கள் குறிப்பாக இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மிகத் தெளிவாக அறிவார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்தபோது, அன்றைக்கு ஒரு பொதுநல வழக்காக நம்முடைய புருஷோத்தம் தொடுத்தார். அந்த பொதுநல வழக்கைத் தொடுத்த காரணத்தினால் தான் அன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் அதை விசாரித்து ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து, உடனடியாக விடுதலை செய்தார்.

புருசோத்தம் தன் திறமையால் படிப்படியாக மாநில அரசு வழக்கறிஞராக நியமனம் பெற்றார். மத்திய அரசின் மூத்த குழு வழக்கறிஞராகவும் இரண்டு முறை பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்.

அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சொல்வார்கள், அதே போல அப்பாவுக்குப் பெண் தப்பாமல் பிறந்திருக்கிறார். மணமகளாக இருக்கும் பூர்ணிமா மாநகராட்சி மன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், சுகாதார நிலைக்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்று அந்த கடமையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, பெண்களுக்கு எந்தளவுக்கு உரிமை தருகிறோம், முதன்முதலாகத் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 33 விழுக்காடு ஒதுக்கீட்டைப் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்கவேண்டும் என்று சொன்னபோது எந்த மாநிலமும் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை, கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நான் சென்னையின் மேயராக இருந்தபோது தமிழ்நாடு முதல் மாநிலமாக முன் வந்தது இதுதான் திராவிட மாடல்.

இன்றைக்குப் பெரிய பெரிய பொறுப்புகளில் உட்கார்ந்து கொண்டு, யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அந்த பதவி என்பதே வேஸ்ட். அதுவும் பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு, திராவிடம் என்றால் என்ன? திராவிட மாடல் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் - இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம்.

மத்திய அரசில் இருக்கக்கூடிய பிரதமர், உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித்ஷா ஆகியோரை கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது அவர் இங்கு இருக்கவேண்டும். அவர் விருப்பத்திற்கு எதை வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டிருக்கிறார்." என மணமக்களை வாழ்த்தி உரையை முடித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.