ETV Bharat / state

2023-2024 நெல் கொள்முதல்; நெல் குவிண்டாலுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:43 PM IST

Etv Bharat
Etv Bharat

TN Farmers incentives: விவசாயிகளுக்கு 2023-2024 நெல் கொள்முதல் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவம் 2002-2003 முதல் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு ஒன்றிய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு ரூ.9,414.58 கோடி நெல் விற்பனை தொகை: கடந்த 2022-2023 காரீப் கொள்முதல் பருவத்தில் 21.08.2023 வரையில் 3,526 எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5,20,503 விவசாயிகளிடமிருந்து 43,84,226 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் காரீப் கொள் முதல் 2023-2024 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

ஒன்றிய அரசு ஒப்புதல்: இந்த ஆண்டு 12.06.2023 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரீப் 2023-2024 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2023 முதற்கொண்டு மேற்கொள்ள ஒன்றிய அரசை கேட்டார். அதற்கிணங்க, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2023-2024 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2023 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

ஒன்றிய அரசு காரீப் 2023-2024 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,203 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடும், கே.எம்.எஸ். 2023-2024 கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை: அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையினை 01.09.2023 முதல் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.28) உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.