ETV Bharat / state

பரந்தூர் விமானநிலையம்: 3.5 கோடி பயணிகளைக் கையாளவும்,புதிய முதலீடுகளைப் பெறவும் வாய்ப்பு - அமைச்சர் தங்கம்தென்னரசு

author img

By

Published : Oct 19, 2022, 4:00 PM IST

வருங்காலத்தில் 3.5 கோடி பயணிகளைக் கையாளவும்; புதிய முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளது எனவும் பரந்தூர் விமான நிலையம் குறித்த விவாதத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.19) நடந்த மூன்றாவது நாள் கூட்டத்தொடரில், மத்திய மாநில அரசுகள் அறிவித்த பரந்தூர் விமான நிலையம் குறித்த விவாதத்தில் சிறப்புக் கவன தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைத் தவிர்த்து மற்ற நிலங்களை எடுக்கலாமே என எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், ஜி.கே.மணி உள்ளிட்டோர் கேள்விகள் எழுப்பினர்.

3.5 கோடி பயணிகளைக் கையாளலாம்: இதற்குப் பதில் அளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தற்போது சென்னை விமான நிலையத்தில் 2.2 கோடி பேர் பயணிகள் கையாளப்படுகின்றனர். கடந்த 2009 முதல் 2019 வரை 9% ஆக பயணிகளின் கையாளுதல் வளர்ச்சியை அடைந்துள்ளது. வருகின்ற 2028 ஆம் ஆண்டில் 3.5 கோடி பயணிகளைக் கையாள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையம் பயணிகளைக் கையாள்வதில் மூன்றாவது இடத்திலிருந்தது தற்போது ஐந்தாவது இடத்திற்குப் பின் தங்கியுள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான ஹைதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களின் விமான நிலையங்கள் பயணிகளைக் கையாளுவதில் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக, தற்போது பெங்களூர் விமான நிலையம் பயணிகளைக் கையாள்வதில் 12 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்தில் 7% சதவீதம் மட்டுமே கையாளுகின்றோம். இரவில் மட்டும் தான் சரக்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார முன்னேற்றம்: பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் புதிய விமான நிலையம் தேவை என்று தெரிவித்தார். பரந்தூர் மற்றும் பரனூர் உள்ளிட்ட 11 இடங்களில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆய்வு மேற்கொண்டு நான்கு இடங்களைத் தேர்வு செய்தது.

பரந்தூரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலைக் கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு, நில மதிப்பீடு 306 ஏக்கர் வீதம் ரூ.10,500 கோடி செலவு ஏற்படும் என்பதால் நடைமுறை சிக்கல் உள்ளது.

8 ஆண்டுகள் ஆகலாம்: மேலும், 30 முதல் 35 வருடங்களுக்குப் பின் விமான நிலையத்தின் தேவை அதிகமாக இருக்கக்கூடும். மேலும், 10 கோடி பயணிகளைக் கையாள வேண்டிய தேவை இருக்கும். மேலும், புதிய விமான நிலையத்தைக் கட்டி முடிக்க சுமார் 8 ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டார்.

புதிய முதலீடுகள் வர வாய்ப்பு: தற்போது 100 ரூபாய் செலவு செய்தால் எதிர்காலத்தில் 325 ரூபாய் வரவு கிடைக்கும். மேலும், புதிய விமான நிலையங்கள், சரக்கு முனையங்கள் மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும். ஏன் 60 கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 60 கிலோ மீட்டர் தொலைவில்தான் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மும்பையில், நவி மும்பை என்ற இடத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்தில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 13 கிராம மக்களின் கருத்துக்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

விவசாயிகளைப் பாதிக்கக்கூடாது! இதனைத்தொடர்ந்து, கிராம மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.