ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் விரைவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி!

author img

By

Published : Jun 27, 2023, 8:42 PM IST

Updated : Jun 27, 2023, 8:47 PM IST

Etv Bharat
Etv Bharat

இந்து சமய அறநிலையத்துறை தான், சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என பக்தர்களின் விருப்பப்படி விரைவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய மற்றும் முன்னோடி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் மோதல் குறித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, "தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி சில தீட்சிதர்கள் செயல்படுகிறார்கள். சிதம்பரம் திருக்கோயிலை தணிக்கை மேற்கொள்ள அனுமதி மறுக்கிறார்கள். விலை உயர்ந்த நகைகள் வரவு வைக்கப்பட்டது குறித்து தெரிவிக்க மறுக்கிறார்கள். இது அவர்களின் சொந்த நிறுவனம் போல் நினைக்கிறார்கள்.

கோயில் நிர்வாகம் குறித்து அரசுக்கு தகவல் தர மறுக்கிறார்கள். மற்ற கோயில்களைப் போல் இங்கு ஒரு உண்டியல் கூட இல்லை. பக்தர்களை நீதிமன்ற திர்ப்பின் படி கனகசபையின் மீது ஏறி வழிபாடு நடத்த நியாயத்தின் படி அனுமதிக்கின்றோம். சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிப்போம். ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத்துறைதான் சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "10 முதுநிலை திருக்கோயில்களில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியபாளையம், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், வள்ளலார் நிலையம், பழனி, இருக்கன்குடி, திருவேற்காடு உள்ளிட்ட கோயில்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 5 கோயில்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. மருதமலை, சிறுவாபுரி, வயலூரில் ஒளவையாருக்கு மணிமண்டபம், மயிலாப்பூர் கலாச்சார மையம், திருவள்ளுவர் திருக்கோயிலை பிரம்மாண்டப்படுத்தி திருக்கோயில் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 286 சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு சிலைகள் மீட்கப்பட்டவில்லை. திருடுபோன சிலைகளை மீட்பது மட்டுமல்லாமல் இருக்கின்ற சிலைகளை பாதுகாக்கவும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை மீது குற்றம் சொல்ல பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் அதிகளவு குடமுழுக்கு, நிலங்கள் மீட்பு, கிராமபுற கோயில்கள் ஆதிதிராவிடர் பழங்குடினர் பகுதி கோயில்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய ஒரு சிலர் நினைக்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. எந்த கோயிலுக்குச் சென்றாலும் விருப்பப்பட்டு செல்பவர்களுக்கு வேறு ஏதும் அடையாளத்தோடு அல்லாமல் வந்தால் அனுமதிக்கிறோம். அறநிலையத்துறை கோயில்களில் மத அடையாளமின்றி வருபவர்களுக்கு அனுமதி உண்டு" என்றார்.

இதையும் படிங்க: சிதம்பர சர்ச்சை - தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றம்

Last Updated :Jun 27, 2023, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.