ETV Bharat / state

Minister Ponmudi: 100க்கும் மேற்பட்ட கேள்விகள்.. அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை 2-ம் நாள் விசாரணை!

author img

By

Published : Jul 18, 2023, 4:22 PM IST

Updated : Jul 18, 2023, 6:22 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளதம சிகாமணி இருவரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜரான காட்சிகள்

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மூத்த மகன் கெளதம சிகாமணி மற்றும் இளைய மகன் அசோக் சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான சென்னை, விழுப்புரம் பகுதிகளில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 17(நேற்று) சோதனை நடத்தினர். குறிப்பாக திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது அவரது மகன் கௌதம சிகாமணியுடன் இணைந்து குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு 28 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் சைதாப்பேட்டையில் பொன்முடி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரிலிருந்து முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சென்னை வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத சுமார் 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வங்கி இருப்பில் வைத்திருந்த 48 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை அவரது அரசு வாகனத்திலேயே அமரவைத்து சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தனர்.

இதேபோல சைதாப்பேட்டை இல்லம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவருக்கு சம்மன் அனுப்பினர்.

அந்த சம்மன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், எம்பியுமான கௌதம சிகாமணி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். குறிப்பாக சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 80 லட்சம் பணம் மற்றும் 48 கோடி ரூபாய் வைப்புத் தொகை மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்து விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம் இருந்து பெறப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு விசாரணையை தனிதனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தயார் செய்து ஆம், இல்லை என பதிலளிக்கும் வகையில் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேள்விகளுக்கு பதிலளித்தவுடன் அதை பதிவு செய்து, படித்து காட்டிய பிறகே எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி பதிவு செய்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக வெளி நாட்டில் ஏதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு!

Last Updated : Jul 18, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.