ETV Bharat / state

புதிய மாதிரி பாடத்திட்டம் 2023 - 2024 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Jul 26, 2023, 7:59 AM IST

Minister Ponmudi announced new model syllabus implemented from academic year 2023 to 2024
அமைச்சர் பொன்முடி

புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சம்பந்தமாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உயர் கல்வித்துறை அமைச்சர், கடந்த 2021, ஆகஸ்ட் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ்நாடு அரசு மதித்து அங்கீகரிக்கிறது.

மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். பாடப்பிரிவுகளுக்கு இடையே 75 சதவீதம் இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணை பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

2018 - 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடு செய்யும் வகையில், இந்த மாதிரிப் பாடத்திட்டம் (2023-2024) மிக தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளர்களிடையே சரியாக சென்றடையும் பொருட்டு இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பிற்கிணங்க 2021, செப்டம்பர் 30 மற்றும் அதே ஆண்டி நவம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற சட்டம் 1992 பிரிவு 10 (2) (H) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 922 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில் துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப B.Sc. Artificial Intelligence, B.Sc. Internet of things, B.Sc. Computer Science, Artificial Intelligence and Machine Learning, B.Sc. Computer Science with Block Chain Technology, B.Sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப், பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுக்களின் (Board of Studies) ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவீத உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் ஐந்து பிரிவுகள் இடம் பெற்றுள்ளன; பகுதி I மொழி, பகுதி II ஆங்கிலம், பகுதி III முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள், பகுதி IV திறன் மேம்பாட்டுப் பாடங்கள், பகுதி V மதிப்புக் கூட்டுக்கல்வி.

இப்பாடத் திட்டத்தில் உள்ள பகுதி I, பகுதி II, பகுதி III ல் உள்ள விருப்பப் பாடங்கள் (Elective papers), பகுதி IV, பகுதி V ல் உள்ள பாடங்களில் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம். பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காக இப்பாடத்திட்டத்தில் பகுதி III இல் உள்ள முக்கிய பாடங்கள் (Core Papers) 75 சதவீதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எதிரான கருத்து இந்த, மாதிரி பாடத்திட்டத்தில் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமையை மதிக்கும் நோக்கத்தில் மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி அமைக்கப்பட்ட இம்மாதிரி திட்டம் உரிமைகளை பாதுகாக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆசிரியர்களின் பணிநிலையில் (work load or service condition) எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களையும் (core papers), விருப்பப் பாடங்களையும் (Elective Papers) செய்முறை பயிற்சிகளையும் (practicals) பருவங்களுக்கிடையே (semesters) மாற்றிக் கொள்ளலாம்.

பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில் (Assessment) மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு. அவர்களின் தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. இந்த கல்வி ஆண்டு முதல் (2023-2024) நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும்.

மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 2.8.2023 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 50% காலியாக உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர் பணிகள் - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.