ETV Bharat / state

பயிர்கடன் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய அறிவிப்பு!

author img

By

Published : Jan 5, 2023, 9:08 AM IST

பயிர்கடன் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய அறிவிப்பு!
பயிர்கடன் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய அறிவிப்பு!

மார்ச் 2023க்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடான ரூ.12,000 கோடிக்கு அதிகமாக பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர், ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நியாயவிலைக் கடைகளில் நேற்று (ஜன.4) தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி மற்றும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான 3 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், “தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் டோக்கன் விநியோகிக்கும் பணி கடந்த ஜன.3 முதல் ஜன.8 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜன.9 அன்று முதலமைச்சரால் இத்திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான அனைத்து பொருட்களும் தரமானதாக, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்காக பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் என்றும், நியாயவிலைக் கடைகள் அனைத்தும் சுகாதாரமாகவும், அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்றும், குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பொங்கல் பரிசு தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 35,000 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது 4,455 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு (2021) ரூ.10,292 கோடி அளவிற்கும், இந்தாண்டு (2022) ரூ.10,361 கோடி அளவிற்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 2023க்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடான ரூ.12,000 கோடிக்கு அதிகமாக பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “முதலமைச்சரால் தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் அரிசிக்கு பதிலாக ராகி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதை தொடர்ந்து, தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசிக்கு பதிலாக ராகி வழங்கப்படும். இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதால், அதிக அளவில் சிறுதானியங்களை நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு: இபிஎஸ் அறிக்கைக்கு அமைச்சர் மா.சு. விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.