ETV Bharat / state

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்: இருப்பினும் அது பொதுநலன் கருதியே!

author img

By

Published : Nov 28, 2021, 1:16 PM IST

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்கச் செல்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: அடையாறில் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம் - டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மா. சுப்பிரமணியன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இன்று (நவம்பர் 28) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வின்போது மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர்.

தொடர்ந்து அடையாறு ஆறு, மல்லிப்பூ காலனிப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய பொன்முடி, "பருவமழை காலத்தில் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம். தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். லண்டன் தமிழ்ச்சங்கம் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது, அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

ஒமைக்ரான் - விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்

அவரைத் தொடர்ந்து பேசிய மா. சுப்பிரமணியன், "78 லட்சத்திற்கும் அதிகமானோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்று 12ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி முகாமோடு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அனைத்து முகாம்களிலும் நடைபெற்றுவருகிறது.

12ஆவது மெகா தடுப்பூசி முகாம்
12ஆவது மெகா தடுப்பூசி முகாம்

உலகளவில் உருமாறிய புதிய வகை வைரஸ் (ஒமைக்ரான்) பரவிவரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையம் உள்ளிட்ட விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க, சீன உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவக்குழு பரிசோதனை செய்துவருகிறார்கள், அவர்களில் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 77.33 விழுக்காடாகவும், இரண்டாம் தவணை செலுத்திக்கொண்டவர்கள் 42.01 விழுக்காடாகவும் உள்ளது.

பொதுவெளியில் செல்வோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும். டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்கச் செல்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓலா, உபரில் பயணிப்பவரா? இனி உங்களுக்கும் ஜிஎஸ்டிதான் - புத்தாண்டில் புது சுமை!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.