ETV Bharat / state

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் - நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் சூப்பர் அறிவிப்புகள்

author img

By

Published : Apr 1, 2023, 6:25 PM IST

சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக 1093 கோடி மதிப்பில் செயல்படுத்த அறிக்கை
சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக 1093 கோடி மதிப்பில் செயல்படுத்த அறிக்கை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக 1093 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கதிற்கு எடுத்து கொள்ளப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் அமைச்சர் ஏ.வா வேலு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் ஏ.வா வேலு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக 1093 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவித்தார்.

"தொலைதூர சாலை பயனாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சுகமான பயண அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் சாலையோர வசதி மையங்கள் பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறுவழிசாலைகள் அதிவேக விரைவு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பாங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தவும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும் பள்ளங்களற்ற சாலைகள் என்ற இலக்கை அடைய ஏதுவாக பொதுமக்கள் துணையோடு கண்டறியபட்ட சாலை பள்ளங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த கைபேசி செயலி உருவாக்கப்படும். மேலும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நெருக்கமான பயனர் குழு முறையில், நிரந்தர அலைபேசி எண் வழங்கபட்டு அந்த எண் வாயிலாக எந்த ஒரு அலுவலரையும் எளிதில் தொடர்பு கொள்ளும் வகை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறைவான பயண அனுபவத்தை ஏற்படுத்தும் நோக்த்தில் தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியம் இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே குறைந்த தூர கப்பல் போக்குவரத்தினை ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் , ராமேஸ்வரத்திலிருந்து காங்கேஸ்வரத்துறை ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்தினை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆறு மாவட்டங்களில் 238 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க 32 கோடி மதிப்பில் நில எடுப்பு பணி மேற்கொள்ளப்படும். கரூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களுக்கிடையான போக்குவரத்துக்கு ஏற்ப புதிய இணைப்பை உருவாக்க 25 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் மேலும் 26 கோடி மதிப்பில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பாப்பான் கோயில் கருக்கலில் சாலையை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக, பெருநகர பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படும் என்றும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழை நீர் எங்கும் தேங்கா வண்ணம் சாதனை படைக்கப்பட்டதுப்போல் இந்தாண்டும் தேவைப்படும் இடங்களில் சிறு பாலம் மற்றும் கால்வாய் ஆகியவை 116 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது எனவும்

சென்னை மாநகரில் பெருகிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராஜீவ் காந்தி சாலையைப் போன்று பல்லாவரம், துரைப்பாக்கம், ஆரச்சாலை ஆகிய பகுதிகளை தொழில்நுட்ப விரைவுசாலையாக பயன்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் சென்னை மாநகர மேம்பாடு பணிகளில் ஒரு பகுதியாக பல்லாவரம் மேம்பாலம் மற்றும் சென்னை புறவழி சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்க ரூபாய் ஒரு கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சுற்றுலா பகுதியை மேம்படுத்தும் நோக்கத்தில் மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு செல்லும் சாலை 22.80 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தவும் ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் புறவழிச்சாலைகள் அமைக்க 88 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைத்து கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற முதலமைச்சரின் முதல் திட்டத்தின் கீழ் 787 கோடி மதிப்பில் 273 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கவும் அனைத்து மாநில நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட்டு சாலை விபத்துகளை தடுக்க மிக முக்கிய தேவைகளை கண்டறிந்து 150 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்

100 கோடி மதிப்பில் மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர சாலை பயனாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சுகமான பயண அனுபவத்தை ஏற்படுத்தும் நோக்கில் 286 கோடி மதிப்பில் துறையூர்,திருப்பத்தூர் மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்றும் 36 கோடி மதிப்பில் இரண்டு நகரங்களுக்கு புறவழிச் சாலைகளும் மற்றும்

இரண்டு ஊர்களுக்கு திருத்திய மேற்பாட்டில் சாலைகளும் அமைக்க நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் மேலும் எட்டு நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க முதல் கட்டமாக 1.50 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 215.80 கோடி மதிப்பில் ஒன்பது மாவட்டங்களில் 13 ஆற்று பாலங்கள் கட்டப்படும் நிலையில் மூன்று மாவட்டங்களில் மூன்று ஆற்றுப்பாலங்கள் அமைக்க 29.65 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு ஆற்று பாலங்கள் கட்ட 50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்படும் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 13. 30 கிலோமீட்டர் நீள ஈரோடு வெளிவட்ட சுற்றுசாலை உள்ளிட்ட 200 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழித்தடமாகவும் 600 கிலோ மீட்டர் சாலைகள் இரு வழி தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என்றும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் விவரங்கள் கணினிமயம் ஆக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு சாலையின் மேடு பள்ளங்களை இணை ஆய்வு வாகனம் கொண்டு கண்டறியவும் இவ்வாறான தர பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலை துறையின் திட்ட பணிகளில் முன்னேற்றம் மற்றும் ஆய்வு விவரங்களை கனிணிமயமாக்கலினால் விவரங்கள் எளிதாக கண்காணிக்கப்படும் என திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதையும் படிங்க: வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.