ETV Bharat / state

முரசொலி நிலப்பிரச்சனை வழக்கு: தீர்ப்புத் தேதியை அறிவித்தது உயர் நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 4:51 PM IST

முரசொலி நிலப்பிரச்சனை வழக்கின் தீர்ப்புத் தேதி அறிவிப்பு
முரசொலி நிலப்பிரச்சனை வழக்கின் தீர்ப்புத் தேதி அறிவிப்பு

Murasoli trust land issue: முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பட்டியலின ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தடை கோரிய வழக்குக்கு ஜனவரி 10ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"யின் அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் (1825 சதுர அடி) நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது என முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி அந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கின்ற நில உரிமையாளரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை முரசொலி அறக்கட்டளையின் வசம் தான் இருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணையில் வந்தது.

அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது தான் எஸ்.சி ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் என்றும், உரிமையியல் வழக்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தான் தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பட்டியலின ஆணையத்தின் தரப்பில் பஞ்சமி நிலம் குறித்த புகாரை விசாரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்தின் மீதான உரிமை யாருக்கு உள்ளது? என தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு ஜனவரி 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருவாய் துறை சார்பில் நுங்கம்பாக்கம் பதிவாளர் அலுவலக 1952ஆம் ஆண்டு ஆவணங்களின் படி அந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதனால் ரயத்துவாரி நிலம் என வகைபடுத்தப்பட்டது என்றும், பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 1912க்கு முன் நிலம் யாருக்கு சொந்தமானதாக இருந்தது. அப்போது நிலம் என்னவாக இருந்தது என வருவாய்த்துறைக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு, 50 ஆண்டு ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மற்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும் வருவாய்த்துறை தெரிவித்தது.

தொடர்ந்து, முரசொலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பஞ்சமி நிலமாக ஆவணங்கள் இருந்தால் பதிவுத்துறையில் யாருடைய பெயருக்கும் பட்டா மாறுதல் பதிவு செய்ய முடியாது. எந்த சந்தேகமும் இல்லாத நிலையில் மட்டுமே பட்டா மாறுதல் செய்ய அனுமதி வழங்கப்படும். பட்டியலின ஆணையம் தரப்பில், புகார்கள் வரும் பட்சத்தில் அதை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. உத்தரவுகள் தான் பிறப்பிக்க முடியாது. பட்டியலின மக்களின் நலன் பாதிக்கப்படும் போது விசாரணை நடத்தப்படுவது சாதாரணமான நடைமுறை.

புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட விசாரணை அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யும்" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கிற்கு வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: செய்ததும் - செய்யத் தவறியதும்.. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஓர் சிறப்புப் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.