ETV Bharat / state

திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

author img

By

Published : Jul 11, 2023, 10:04 PM IST

திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின் தாமதமாக வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீது வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து எம்.பி. கதிர் ஆனந்த் வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கடந்த 2012 -13ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அதை 2015 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தாக்கல் செய்ததுடன், 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், ஒரு கோடியே நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி, திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017 ஆம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்படி தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தாலோ, தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில், வருமானவரித்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பதாக கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியங்கள் கசியவிட்டதாக புகார்.. மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது!

பின்னர் வருமான வரித்துறை தரப்பில், தாமதமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே தாமதமாக தாக்கல் செய்தாரா? வேண்டுமென்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக்கூறி, கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Rahul Gandhi : "ஆக்ரோஷமாக பிரசாரம் செய்யுங்கள்... காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது..." ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.