ETV Bharat / state

சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல: உயர் நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 10:18 PM IST

"சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல" - நீதிமன்றம் உத்தரவு
"சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல" - நீதிமன்றம் உத்தரவு

Assembly live telecast issue: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி அவரையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த வந்த நிலையில், கடந்த முறை விசாரணையில் சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என விளக்கம் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று(டிச.20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், "அரசியல் சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க எந்த தடையும் இல்லை" என்று வாதிட்டார்.

இதனை கேட்ட தலைமை நீதிபதி, "சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், உயர்நீதிமன்றம் அனுப்பும் நோட்டீஸ் அவரை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர், "இ-விதான் செயலி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். பல சட்டமன்றங்கள் இதை வெற்றிகரமாக அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும்போது, நேரடி ஒளிபரப்பானது துண்டிக்கப்படுகின்றது. ஆளுங்கட்சியினர் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது" என்று புகார் அளித்தார்.

அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், "இதுபோன்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது" என்று ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி, "நேரடி ஒளிபரப்பை செய்வது என்பது சூழலைப் பொறுத்தது. சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம் இல்லை" என்றார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதை நிரூபிப்பது குறித்து வேலுமணி தரப்பு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டார். இது குறித்து, வேலுமணி தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டியதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்; எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனத் தமிழக அரசு திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.