ETV Bharat / state

அதிமுகவின் மேல்முறையீடு; ஒரே நேரத்தில் 4000 பேரிடம் கையெழுத்து பெற்றது எப்படி? - நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Jun 15, 2023, 10:07 PM IST

அதிமுக மேல்முறையீடு
அதிமுக மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்களில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் ஏழாவது நாளாக இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது ஒபிஎஸ் அணியினர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ண குமார், பி.எஸ் ராமன், அப்துல் சலீம், ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி இறுதி வாதங்களை முன்வைத்தனர். அ.தி.மு.க தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார்.

ஒ.பி.எஸ் அணி தரப்பில், ”அ.தி.மு.அதிமுக க வரலாற்றிலேயே எந்த மூத்த தலைவரும் கட்சியிலிருந்து எங்களை போல தூக்கி எறியப்பட்டது இல்லை. 45 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டவர்களை நீக்கியுள்ளனர்; ஒருவரோ அல்லது இருவரோ மட்டும் எடுக்கும் முடிவு என்பது கட்சியின் பொதுக்குழுவின் முடிவாக கருத முடியாது. ஒரு நேரத்தில் அடிப்படை கட்டமைப்பே இல்லை என சொல்கிறார்கள், மற்றொரு நேரத்தில் பொதுச் செயலாளர் பதவிதான் அடிப்படை கட்டமைப்பு என சொல்கிறார்கள்” என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

2026-ல் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் பதவிகாலம் முடிவதால், அதன்பின்னர் தான் தேர்தல் மூலம் புதிய பதவியை கொண்டுவந்திருக்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம், இரு பொதுக்குழுக்களிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கையெழுத்திட்டதற்கான ஆதாரங்கள் எங்கே? எப்படி வாங்கினீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

ஒரே நேரத்தில் 4000 பேரிடம் கையெழுத்து பெற்றது எப்படி? நீதிமன்றம் கேள்வி

அதிமுக தரப்பில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டுதான் கையெழுத்துக்கள் பெறப்பட்டன என்றும், தமிழகம் முழுதும் ஒரே நாளில் கையெழுத்திட்டு கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வருவதில் சிரமம் இல்லை என்றும், விசாரணை நீதிமன்றத்தில் தேவைப்படும்போது தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக், அனைத்து தரப்பையும் முழுமையாக கேட்டோம் என நம்புகிறோம் என தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பிற்கும் உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை ஜூன் 28 தள்ளிவைத்தனர். அன்றைய தினம் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டால், தீர்ப்பு தள்ளிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'செந்தில் பாலாஜியை கொடுமைப்படுத்துவதால் திமுக அஞ்சாது' - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.