ETV Bharat / state

அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 6:31 PM IST

அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Tamilnadu weather forecast: தமிழ்நாட்டில் டிச.15, 16 ஆகிய இரு தினங்களுக்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அரபிக்கடலில் 40 முதல் 55 கி.மீ., வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் டிச.15, 16 ஆகிய தேதிகளில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.14) வெளியிட்ட தகவலில், 'தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாட்கள் முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாளை (டிச.15) தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல, டிச.16ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பை விட 5 சதவீதம் குறைந்த மழைப்பொழிவு: தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையின் காலகட்டத்தில், அக்.1 ஆம் தேதி டிச.14ஆம் தேதி வரை 35 செ.மீ., அளவு மழை பெய்துள்ளது. இயல்பாக இக்காலத்தில் 40 செ.மீ., பெய்யவேண்டிய மழையானது, இயல்பை விட 5 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மழையானது பதிவாகவில்லை.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அரபிக்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை முதல் டிச.17ஆம் தேதி வரை குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓடியதால் இரண்டு பெண் வார்டன்கள் சஸ்பெண்ட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.