காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபர்.. தண்ணீர் ஊற்றி மீட்ட காவல் துறையினர்..!

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபர்.. தண்ணீர் ஊற்றி மீட்ட காவல் துறையினர்..!
Chennai Commissioner office: சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, கந்துவட்டிக்காரர்களின் தொல்லையால் காவலரின் சகோதரர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் விஜயகுமார் என்பவரின் சகோதரர் ஓவியக்குமார். அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் இவர், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இவர் வாங்கிய கடனுக்கு மேல் பல மடங்கு வட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் கந்து வட்டிக்காரர்கள் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் தன் மீதும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது சகோதரர் மீதும் வழக்கறிஞர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி வருவதாகவும் ஓவியக்குமார் கூறுகின்றார்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு ஓவியக்குமார் திடீரென நேற்று தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கு இருந்த காவலர்கள் அவரைத் தடுத்து, அவரை மீட்டனர். அதன் பின்னர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
