ETV Bharat / state

கூகுள் ரிவியூவில் கருத்து பதிவிடுவது அவதூறு பரப்புவதா?.. கருத்து சுதந்திரத்தை கெடுத்துவிடாதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 9:31 AM IST

MHC
MHC

Madras High Court on adverse review in Google : கூகுள் ரிவியூவில் கருத்து பதிவிடுவதை அவதூறாக கருத முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, அப்படி கருதும்பட்சத்தில் அது கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று கூறினார்.

சென்னை : எதிர்மறையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவது அவதூறு அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்கறிஞர் சாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மேல் முறையீட்டு வழக்கில், "வழக்கு தொடர்பாக கிருத்திகா என்பவர் வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து சில சட்டச் சேவைகளைப் பெற்றதாகவும், பின்னர் கூகுள் ரிவியூவில் வழக்கறிஞருக்கு எதிராக எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனத்தைப் பதிவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், வழக்கறிஞரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட கிருத்திகா, அவரது தந்தை செந்தில் மற்றும் கூகுள் நிறுவனத்தின் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" அந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கிருத்திகா தரப்பில், "வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்ட சேவைகள் குறித்து தனது கருத்தையே கூகுளில் தெரிவித்ததாகவும், அதில் வழக்கறிஞர் வழங்கிய சேவைகள் திருப்திகரமாக இல்லை என்பதால் அவ்வாறு கருத்து பதிவிட்டதாகவும்" கூறப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவில், "வழக்கறிஞரின் சேவைகள் குறித்த விளம்பர விமர்சனத்தை ஆன்லைனில் வெளியிடுவது தவறா? அல்லது அவதூறானதா? என முடிவு செய்ய வேண்டும்.

இலவசமாக சேவையை வழங்கக் கூடிய கூகுள் சேவையில், ஒருவரிடம் இருந்து பெற்ற சேவையை பற்றி எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது மற்றும் சேவை வழங்கிய கூகுள் நிறுவனத்தின் அவதூறு நடவடிக்கையாக கருத முடியாது. இன்டர்நெட் என்பது ஒரு இலவச சேவை மையம், இது ஒரு முக்கியமான வெளிப்பாடு மற்றும் தகவல் தொடர்புக்கான மையம், பெறப்பட்ட சேவைகளைப் பற்றி கூகுள் ரிவியூவில் கருத்துக்களை வெளிப்படுத்துவது அவதூறுக்கு இடமளிக்காது.

சேவையைப் பற்றி கூகுளில் எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது, அவதூறாகக் கருத முடியாது. அவ்வாறு அவதூறாக கருதினால் அது இந்திய அரசியலமைப்பு 19(1)(a) நமக்கு வழங்கிய கருத்து சுதந்திரத்தை பாதிக்கும்" என்று கூறி நிதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : மெட்ரோ இடம் ஆக்கிரமிப்பு... திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.