ETV Bharat / state

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 9:55 PM IST

பட்டாசு கடைகளுக்கான புதிய ஒப்பந்த விதிகள் ரத்து
பட்டாசு கடைகளுக்கான புதிய ஒப்பந்த விதிகள் ரத்து

Theevu thidal crackers shop: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு கடைகளை ஒதுக்க வேண்டுமென்ற சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் கோரிக்கை மீது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு விற்பனைக்காகக் கோரப்பட்ட இரு ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாகக் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், அதற்கான 20 லட்சம் ரூபாயில் முன்பணத் தொகை 2 லட்சம் ரூபாயுடன், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்த தகுதியும் இல்லாத "சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம்" என்ற புதிய சங்கத்தை ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள அனுமதித்ததாகவும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த அந்த சங்கத்தை ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (அக்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். விஜய் ஆனந்த், தங்களது சங்கத்திற்கு விற்பனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போதிய அனுபவம் உள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன புதிய சங்கத்திற்கு ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கியது சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார்.

அதன் பின்னர், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, "ஒப்பந்தப்புள்ளி நடைமுறை மற்றும் ஒதுக்கீடு செய்ததில் எந்த தவறும் இல்லை. சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம் போதிய தகுதிகளைப் பெற்றுள்ளதாலேயே ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டது" என்று கூறினார்.

தற்போது பட்டாசு விற்பனைக்காக 55 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 கடைகள் அமைக்கப்படும் எனவும், மொத்தமுள்ள 60 கடைகளில் 17 கடைகளை மனுதாரர் சங்கத்திற்கு ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதனையடுத்து, ஒப்பந்தப்புள்ளி விதிகளை மாற்றியது தவறு எனத் தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதைத் தவிர்க்க வேண்டுமெனத் தெரிவித்தார். மேலும், இரண்டு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் நாளை மதியம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் முன்பு ஆஜராகி கோரிக்கை வைக்கவும், அவர் இந்த விவகாரம் தொடர்பாக சுமுக தீர்வு காணவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - காசிக்கு 300 நபர்கள் ஆன்மிக சுற்றுலா.. அரசு சார்பில் ஏற்பாடு என அமைச்சர் தகவல்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.