ETV Bharat / state

தேர்தல் முடிவில் முறைகேடு: மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

author img

By

Published : Mar 3, 2022, 8:58 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மதுரை டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டன. 10ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளைப் பெற்றனர்.

இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணம்

இதுசம்பந்தமாக தேர்தல் அலுவலர் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக்கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச்.3) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதைப் பார்வையிட்ட நீதிபதிகள், மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும் எனவும், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை

மேலும், தேர்தலை உயர் நீதிமன்றம் கண்காணித்த நிலையில், தேர்தல் அலுவலர் எப்படி அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணையம் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட்டு இருக்க வேண்டும் எனக்கூறி, திருத்திய முடிவை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அலுவலரை திங்கட்கிழமை (மார்ச் 7) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

அதேபோல் வீடியோ பதிவை நகல் எடுத்துப் பாதுகாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல்போன மயில் சிலை கண்டுபிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.