சென்னை: தமிழ்நாட்டில் யானைகள் வேட்டை தொடர்பான வழக்குகளையும், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இருப்பினும் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என கூறி, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் நேற்று (ஏப்ரல்.27) விசாரணைக்கு வந்த போது, சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலாதேவி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக்குழுவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உள்பட நான்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணைக்குத் தேவைப்படும்பட்சத்தில் காவல் துறை, வனத்துறை அதிகாரிகளைச் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், 19 வனக்குற்றம் தொடர்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், மே 15ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை தொடங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.