ETV Bharat / city

கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்பும்வரை அலட்சியமாக இருப்பீர்களா? - உயர்நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Apr 27, 2022, 10:23 PM IST

அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும் வரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கும் அலுவலர்களின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக வெங்கட்ராமன் என்பவரும், சொகுசு பங்களாவும், நூற்பாலையும் கட்டப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

அதில், குளம் தூர்வாருதல், கோவில் மண்டபம் புதுப்பித்தல் என்ற பெயரில் மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டுமானம் நடைபெறுவதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் சில வருடங்களில் உரிமையாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலங்களை மீட்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு பெரிய கட்டுமானங்கள் கட்டப்பட்டது, மூன்றாவது நபர் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிறகுதான் அறநிலையத்துறைக்கே தெரிய வருகிறது என வேதனை தெரிவித்தனர்.

அறநிலையத்துறை ஆய்வாளர்களின் அலட்சியத்திற்காக, அவர்களின் ஒரு வருட சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்கள்தான் சம்பந்தப்பட்ட ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர். உள்ளாட்சி அமைப்புகளும் எப்படி அனுமதித்தன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யார் அனுமதித்தார்கள்? தடுக்காதவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டடம் கட்டிமுடிக்கப்படும் வரை காத்திருக்கும் அலுவலர்கள், அதன் பின்னரே நோட்டீஸ் அனுப்புவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சரியாக இருக்கும் என தெரிவித்தனர்.

அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராவதற்கு கூடுதலாக வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விசாரணை கைதி மரணம் போன்ற சம்பவங்கள் இல்லாத சூழல் வரவேண்டும் - வேல்முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.