ETV Bharat / state

அமைதிப்படை வீரர்களுக்கான இறைச்சி கொள்முதல் ஊழல் வழக்கு; மேஜர் ஜெனரலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 7:12 AM IST

Etv Bharat
Etv Bharat

Major Guptha: இலங்கையில் உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் 1987-இல் அனுப்பப்பட்ட அமைதிப்படை வீரர்களுக்கு வழங்குவதற்காக இறைச்சி கொள்முதலில் ஊழல் செய்ததாக அப்போதைய ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் நடந்த உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் கடந்த 1987-இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. அமைதிப்படை வீரர்களுக்காக உணவுப் பொருள்கள் சப்ளை செய்வதற்கான குழுவில் அங்கம் வகித்த மேஜர் ஜெனரல் ஏ.கே.குப்தா, டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மேஜர் குப்தாவை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-இல் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள அஹமத்நகர் அழைத்துச் சென்றபோது மேஜர் குப்தா தப்பிச் சென்றதை வைத்து சிபிஐ நீதிமன்றம், வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் தீர்ப்பளித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, மேஜர் குப்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: “மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.