ETV Bharat / state

தமிழகத்தில் 7,007 பேர் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 5:28 PM IST

Minister Ma.Subramanian
உடல் உறுப்பு தானம் செய்த உடலுக்கு அரசு மரியாதை செலுத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Minister Ma.Subramanian: சென்னை ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 7,007 பேர் உடல் உறுப்பு தானத்திற்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்தினால் மூளைச்சாவு அடைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அராஜகன் கலியமூர்த்தி (வயது 26) என்ற இளைஞரின் உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார்.

  • உடல் உறுப்பு தானம் செய்துள்ள,மூளைச் சாவு அடைந்த 26 வயது இளைஞரின் திருவுடலுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. #organdonation pic.twitter.com/dRfVCVS7EQ

    — Subramanian.Ma (@Subramanian_ma) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாநகர் பகுதியைச் சார்ந்த 26 வயது இளைஞர் அராஜகன் கலியமூர்த்தி என்பவர் மூளைச்சாவு அடைந்ததையொட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்கள் அவர்களுடைய குடும்பத்தினரை அணுகினர்.

குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்து கூறினர். பின்னர் குடும்பத்தினர்கள் விருப்பம் தெரிவித்து இளைஞரின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டிருக்கிறது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளுக்கே தந்துள்ளதால் பலருக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

சிறுநீரகத்தினை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும், இதயம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் தரப்பட்டிருக்கிறது. கண்விழிகள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது.

இறந்தவருடைய தந்தை அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் விவசாயம் பணி செய்து வருகிறார். இளைஞரின் தாய் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர்களுடைய முழு விருப்பத்தின்பேரில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கு பின் 26 மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் 55 நாட்களில் 26 பேருடைய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பலருக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவித்த பின்னர் இணையதளம் மூலம் உடல் உறுப்பு தானம் செய்ய 2890 பேர் முன்வந்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு உடல் உறுப்பு தானம் செய்ய 8234 பேர் பதிவு செய்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை உடல் உறுப்பு வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சிறுநீகரம் 6229 பேர், கல்லீரல் 465, இதயம் 80, நுரையீரல் 68, இதயம் மற்றும் நுரையீரல் 25, கை 26, சிறுகுடல் 2, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 42, சிறுநீரகம் மற்றும் கணையம் 41, இதயம் மற்றும் கல்லீரல் 1, கணையம், சிறுகுடல், வயிறு 1 ஆக மொத்தம் 7,007 பேர் உடல் உறுப்பு தானத்திற்காக தமிழ்நாட்டில் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்த வகையில் மூளைச்சாவு அடைந்தவர்களுடைய உடல் உறுப்புகள் தானமாக பெறுவது அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் பெறுவதிலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதிலும் மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்த அராஜகன் கலியமூர்த்தி என்பவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபரிமலை விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.. துளசிமணி மாலை அணிந்து சரண கோஷம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.