ETV Bharat / state

'தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்களை அழைத்து வருக' - ஜப்பான்வாழ் இந்தியர்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

author img

By

Published : May 28, 2023, 6:31 PM IST

Updated : May 28, 2023, 6:43 PM IST

ஜப்பான்வாழ் இந்தியர்களிடம் முதலமைச்சர் கோரிக்கை
TN CM MK Stalin speech to Indians living in Japan

'ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கான சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்து, தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும்' என ஒசாகாவில் வாழும் இந்தியர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு (Global Investors Summit in Chennai, 2024) அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர், அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, நேற்று (மே 27) ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

இந்த கலாசார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான 'அகிமி சகுராய்' அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இந்திய மக்களின் கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் நிக்கிலேஷ் கிரி (Nikhilesh Giri, Consulate General of India in Osaka, Japan) அவர்களுக்கும், உறுதுணையாக இருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து, ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும் வளமும் சேர்க்கும் மாநிலமாக 'தமிழ்நாடு' திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையையும், பழமையையும், கீழடியும்(Keeladi), பொருநையும் இன்று உலகுக்கே அடையாளம் காட்டி வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன். பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், அனைத்து மாணவர்களையும் அனைத்து தகுதியும் கொண்டவர்களாக மாற்றும் 'நான் முதல்வன் திட்டம்', பள்ளிகளில் மதிய சத்துணவோடு காலையிலும் உணவு என குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சி செயலாற்றி வருகிறது என பெருமிதம் கூறினார்.

மேலும், எங்களின் இந்த திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக வருகின்ற 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' ஒன்றை மிகப் பெரியளவில் நடத்திட திட்டமிட்டுள்ளோம். அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்த சுற்றுப்பயணம் என்றார்.

வர்த்தகத்தை தாண்டிய நட்பாக நீடிக்க வேண்டும்: நிசான், தோஷிபா, யமஹா, உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப்படையில் செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அவை அமைய வேண்டும்.

ஜப்பான் - இந்திய நட்புறவானது, புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு, 60 ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 'மீண்டும் ஜப்பான் - துடிப்பான இந்தியா - புதிய பார்வைகள் – புதிய பரிமாற்றங்கள்' என்று அதற்கு தலைப்பு தரப்பட்டு இரண்டு நாட்டிலும் கலாசார விழாக்கள் நடைபெற்றன. இத்தகைய கலாசார தொடர்புகள் தொடர வேண்டும்.

ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான 'இந்திய கான்சுலேட் ஜெனரல் நிக்கிலேஷ் கிரி' அவர்களும் சிறப்பாக பணியாற்றி, ஜப்பானில் உள்ள இந்திய சங்கங்களுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்களை அழைத்து வருக: இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997ஆம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008ஆம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக்கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திராவிட மாடல் பெயரில் ஸ்டாலின் தான் 'மாடல் போல்' சுற்றுகிறார்- பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

Last Updated :May 28, 2023, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.