திராவிட மாடல் பெயரில் ஸ்டாலின் தான் 'மாடல் போல்' சுற்றுகிறார்- பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

author img

By

Published : May 28, 2023, 12:19 PM IST

திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தான் மாடல் போல சுற்றுகிறார்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு திமுகவினர் தான் மாடல் போல நிமிடத்திற்கு ஒரு துணியை மாற்றி கொண்டு இருக்கிறார்களே தவிர நாட்டுக்கு எவ்வித வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தான் மாடல் போல சுற்றுகிறார்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

தூத்துக்குடி: முறப்பநாடு கோவில்பத்து கிராம முறப்பநாடு கோவில்பத்து கிராம வி.ஏ.ஓ லுார்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காகவும், மேலும் கனிம வளங்கள் கேரளாவிற்குக் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி தென்காசியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி வந்தார்.

இன்று காலை (மே 28) சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த இவருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “கனிமவளம் கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் எனத் தென்காசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தேன்.

தமிழகத்திலிருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது என்றால் கேள்வி கேட்க ஆள் இல்லையா? ஆளுங்கட்சியைக் கேட்டால் முன்னர் ஆட்சி செய்த கட்சியினர் தான் அனுமதி கொடுத்ததாக கூறுகின்றனர். எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியைக் கூறுகின்றனர். இவ்வாறு இரண்டு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதைத் தட்டிக் கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்விக்குறி வந்துள்ளது. வி.ஏ.ஓ குடும்பத்தினருக்கு முதல்வர் ஒரு கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா?

நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன இருக்கிறது. ஆகவே, மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. தமிழகம் எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும் என்றால் மக்கள் மாற வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பது, ஓட்டுக்குப் பணம் வாங்குவது என்னும் இந்த நிலை மாறினால் தான் தமிழகம் முன்னேறும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்தது தொடர்பான கேள்விக்கு? “செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்தது. காவல்துறை இது குறித்துக் கூறும் போது, எங்களுக்கு சோதனை பற்றி எவ்வித தகவலும் கொடுக்கவில்லை. முன்னரே தகவல் கொடுத்திருந்தால் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்திருப்போம் என்றனர்.

ரெய்டு என்றால் என்ன என ஒரு காவல்துறை அதிகாரிக்குத் தெரியாதா? யாருக்கும் சொல்லாமல் திடீரென்று வருவது தான் ரெய்டு, இதிலிருந்தே அரசியல் வாதிகளுக்கு எந்த அளவுக்கு ஒரு கை பாவையாக காவல்துறை மாறி உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கனிமவள கொள்ளையைத் தடுக்கின்ற வி.ஏ.ஒ க்கு பாதுகாப்பு இல்லை.

இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். ஆட்சிகள் மாற வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கில் அவர், ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று இருக்கிறார். ஏற்கனவே, துபாய் போயிட்டு வந்து தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகளைத் திறந்து இருக்கிறார்?. எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வந்துள்ளது?.

எல்லாமே கண்துடைப்பு நாடகம். திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு அவர் தான் மாடல் மாதிரி ஒரு நிமிடத்திற்கு ஒரு ட்ரெஸ் போட்டுக் கொண்டு மாடலாக மாறி உள்ளார். எத்தனை இண்டஸ்ட்ரீஸ், எத்தனை வேலை வாய்ப்புகள் வருகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குப் பின் அதற்கான கேள்வியை நாம் எழுப்புவோம்.

இங்கு மூன்று மருத்துவ கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உலகப் பிரசித்தி பெற்றது. இதனை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதை சரி செய்யுங்கள் என்றால் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

நல்ல கல்லூரி வேண்டும் என்றால் அதை அரசு தரமாட்டார்கள். ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளச்சாராயம் ஒரு பக்கம், தானியங்கி இயந்திரம் மூலம் மது ஒரு பக்கம். மதுவுக்கு அடிமையாகத் தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசையோ தமிழக ஆட்சியில் இருக்கிற அவர்களையோ கேள்வி கேட்டு விடக்கூடாது.

பெண்கள் முதற்கொண்டு இப்போது குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். கஞ்சா பழக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகம் போதைக்கு அடிமையாகி இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என எல்லோரும் எதிர்காலத்தில் வீணாக போகக் கூடிய நிலையை இந்த தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. மக்கள் மாறினால் எல்லாம் மாறும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள். நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டுமொத்த தமிழருக்கும் கிடைத்த பெருமை” எனக் கூறினார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் வீட்டில் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர்.. சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 'செங்கோல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.