ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி; கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 11:36 AM IST

கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மிக்ஜாம் புயல் எதிரொலி

Cyclone Michaung in chennai: தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கூவம் ஆற்றை சுற்றி இருந்த ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் எதிரொலி

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. இந்நிலையில், கூவம் ஆற்றுக்கு அருகே உள்ள ஏரிகளில் நிரம்பிய மழைநீர், கூவம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வாலாஜா சாலை, மவுண்ட் ரோடு, அண்ணா சாலை, சேப்பாக்கம், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் பிற தாழ்வான பகுதிகள் உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே பாபட்லாவுக்கு அருகில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது பாபட்லாவில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் நீர் தேக்கம் காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் மின் விநியோகம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

மேலும், இந்த தொடர் மழையால் சென்னையில் உள்ள பல ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், கூவம் அருகே உள்ள ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கூவம் ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்குன்றம் பகுதியில் உள்ள பாலத்தைச் சுற்றிலும் கூவம் ஆற்றில் நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், புயலுக்குப் பிந்தைய விளைவுகளைச் சமாளிக்க தமிழகத்தின் தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், அவர் மாநில அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் டாக்டர் எழிலன், கருணாநிதி, இ.பரந்தாமன், எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இதர வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிலையில் தற்போது புயல் தமிழகத்தை விட்டு நகர்ந்துள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க தண்ணீர் தேங்கிய சாலைகளில் நடந்து சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக திரள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.