சென்னை: காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏ.டில்லிபாபு என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஆனால், பக்தர்களிடம் இருந்து அறநிலையத்துறை திருப்பணி பிரிவு இணை ஆணையர் கவிதா நன்கொடை வசூல் செய்து வைத்துக்கொண்டு, அரசு நிதியிலும் முறைகேடு செய்துள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்படி, இணை ஆணையர் கவிதா உள்ளிட்டோர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இணை ஆணையர் கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், புகாரை சரியாக ஆய்வு செய்யாமல் போலீசாரை வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு பணி செய்யும் அதிகாரிகள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும். அதேபோல புகார் கொடுத்த டில்லிபாபு, கோயிலுக்கு சொந்தமான கடையில் உள்வாடகையில் இருந்துள்ளார்.
அவரை கடையில் இருந்து வெளியேற்றியதால், உள்நோக்கத்துடன் இந்து புகாரை கொடுத்துள்ளார். அரசு ஊழியர்கள் தங்களது பணியை எந்த ஒரு பயமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். ஆகவே, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, சிவகாஞ்சி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கோயில் புதுப்பிக்க பக்தர்களிடம் நன்கொடை வசூலித்ததாக எழுந்த குற்றம்சாட்டு குறித்து, உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்தால், அதன்படி. செயலாளரும், ஆணையரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவி மரணம்: மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியைத் திறக்க அனுமதி?