சென்னை: அடுத்து தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 42ஆம் ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் பால் வில்சன் தலைமை தாங்கினார். விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். அறிவுரை கூற வரவில்லை, அனுபவத்தை தெரிவிக்க வந்துள்ளேன், அதிக நேரம் பேசுவதை விட உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்புகிறேன். நான் வந்தது எனக்கு திறமை இருக்கிறது என நம்பி தான். அதனால் தான் இங்கு நிற்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என நினைத்து என் பெற்றோர் செயல்படவில்லை. அதனால் தான் இங்கு நிற்கிறேன். என்னைப் போல் நீங்கள் சிந்திக்க வேண்டாம்.
நமது இந்திய மக்களின் சராசரி வயது வெறும் 29. ஆனால் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் சராசரி வயது 54. இதனை களைய வேண்டும். மாணவர்கள் வாக்களிக்க வர வேண்டும். அரசியல் உங்களை வழிநடத்தக் கூடாது. நீங்கள் அரசியலை வழி நடத்த வேண்டும். 100 சதவீதம் மாணவர்கள் வாக்களித்தால் அவர்களை நான் தோளில் தூக்குவேன். ஓட்டு எனக்கு போடுங்க என கேட்க வரவில்லை. கண்ணாடியை பார்க்க வேண்டும். உங்களை நீங்கள் நேசியுங்கள். உங்கள் குணாதிசயங்களை நேசியுங்கள்.
அன்னையின் மடியில் தாலாட்டு கேட்டபோது கலை எனக்கு அவசியமானது. கலையும் காதலும் அவசியம். தோல்வி, சோதனை வரும் என பயம் வந்தால் சிறிது நேரம் தூங்கி விடுவேன். போருக்குச் செல்வதற்கு முன்பு தூங்கி அதன் பிறகு கிளம்பிச்செல்வேன். மொழி புரிந்துவிட்டால் மற்ற மொழிகளையும் புரிந்து கொள்ளலாம்.
சினிமாவில் இயக்குநராகவே பணியாற்ற வந்தேன். அதனை மடைமாற்றிவிட்டவர் இயக்குநர் கே.பாலசந்தர். அறிவுரையை கேட்டதால் நிறைய அற்புதமான இயக்குநரிடம் கேட்டதால் தற்போது இங்கு வந்துள்ளேன். எனக்கு சினிமாவுக்கு அடுத்து அரசியல் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். நான் கிறிஸ்தவ கல்லூரியில் பேஷன் டிசைனிங் ஸ்டூடியோ திறந்தேன். அதற்கு எனக்கு அருகதை இருக்கிறது. காரணம், நான் காதி உடை அணிகிறேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Erode by election: வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரத் தணிக்கை