ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 2 கூடுதல் நீதிபதிகள் பொறுப்பேற்பு.. நீதிபதிகளின் பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 6:43 PM IST

Etv Bharat
Etv Bharat

Newly appointed judges of Madras HC: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோருக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இரு நீதிபதிகளுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (அக்.16) நடைபெற்றது. இரு கூடுதல் நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோருக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சாதாரண குடும்பத்தின் பின்னணியில் இருந்து தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றிருக்கும் இருவரும் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

இதேபோல், புதிய நீதிபதிகளை வரவேற்று பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மின்னணு முறை மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை நீதிமன்றங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். அப்போது 'ஏற்புரையாற்றிய இரு நீதிபதிகளும், தங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்குவதாக தெரிவித்தனர். புதிய நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 10ஆக குறைந்துள்ளது' என்று தெரிவித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட இரு கூடுதல் நீதிபதிகள் யார்?

நீதிபதி செந்தில்குமார்: நாராயணசாமி - சங்கரவல்லி தம்பதியருக்கு மகனாக நீதிபதி என்.செந்தில்குமார்(Madras High Court Additional Judge Senthilkumar), 1970ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி பிறந்தார். தந்தை நாராயணசாமி ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். தாய் சங்கரவல்லி, அச்சரப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2006 முதல் 2011 வரை பணியாற்றியவர். சென்னை பெரம்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த நீதிபதி செந்தில்குமார், சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் தற்போதைய, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் ஜூனியராக தனது பணியை தொடங்கினார்.

நீதிபதி அருள் முருகன்: தருமபுரியில் கணபதி - நீளாமணி தம்பதியருக்கு 1976 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி நீதிபதி அருள் முருகன்(Madras High Court Additional Judge Arul Murugan) பிறந்தார். அவரது தந்தை பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். சேலத்தில் பள்ளி படிப்பையும், சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1999 ஆம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியின் ஜூனியராக தனது பணியை தொடங்கினார். சில வழக்குகளில் தற்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள ஆர்.சண்முகசுந்தரத்திடம் ஜூனியராக தொழில் புரிந்தார் என்பது குறப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "தமிழ்நாடு வரலாறு திமுக ஆட்சியில் தொடங்கவில்லை.. காமராஜர், கக்கனை மறந்த சோனியா, பிரியங்கா" - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.