ETV Bharat / state

"தமிழ்நாடு வரலாறு திமுக ஆட்சியில் தொடங்கவில்லை.. காமராஜர், கக்கனை மறந்த சோனியா, பிரியங்கா" - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 11:35 AM IST

vanathi srinivasan press release: தமிழ்நாட்டின் வரலாறு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தொடங்கியதாக திமுக எண்ணி வருவதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த காமராஜர், கக்கன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகிய காங்கிரஸ் தலைவர்களை சோனியா மற்றும் பிரியங்கா காந்தி மறந்ததாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீன்வாசன் விமர்சித்து உள்ளார்.

vanathi srinivasan press release
வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணியின் வாரிசு பெண் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய சோனியா, பிரியங்கா இருவரும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரை மட்டுமே புகழ்ந்து பேசினர்.

திமுகவினருக்கு தமிழ்நாட்டின் வரலாறு என்பது பெரியாரில் இருந்து தான் தொடங்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 1967ஆம் ஆண்டில் இருந்துதான் துவங்கியது போலவே பேசுவார்கள். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கர்ம வீரர் காமராஜர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆர்.வெங்கட்ராமன், பசுமைப் புரட்சிக்கு காரணமான சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருந்த இளையபெருமாள் என பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்கள் என அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்.

  • தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களின் தியாகத்தை மறைத்த சோனியா, பிரியங்கா

    திமுகவின் பிரிவினை பாதையில் பயணிக்கும் சோனியா குடும்ப காங்கிரஸ்

    சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா உள்ளிட்ட 'இண்டி'… pic.twitter.com/S2loskgNG9

    — Vanathi Srinivasan (@VanathiBJP) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால் இவர்களின் பெயர்களை மறந்தும் கூட சோனியா, பிரியங்கா இருவரும் உச்சரிக்கவில்லை. பிரியங்கா பேசும்போது பெரியார் எழுதிய, பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தை குறிப்பிட்டார். இலக்கிய வளமையும், பல்வேறு சீர்திருத்த கருத்துக்களையும் கொண்ட உலகின் மிக பழமையான மொழி தமிழ்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற புறநானூற்று வரியை விட சமத்துவம் ஏதாவது உண்டா? திருக்குறளில் இல்லாத கருத்துக்களா? மகாகவி பாரதியை விட பெண் உரிமைக்காக குரல் கொடுத்த புரட்சிக்கவி யாராவது உண்டா? இவற்றையெல்லாம் குறிப்பிடாமல் திமுக தலைவர்களைப் பற்றி மட்டும் பேசி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து உண்மையான காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

காமராஜர் காலம் வரை இருந்த காங்கிரஸ் வேறு, இப்போது இருக்கும் காங்கிரஸ் வேறு என்பதை சோனியாவும், பிரியங்காவும் உறுதிப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் இனி தேசிய பாதையில் பயணிக்காது. திமுகவின் பிரிவினை பாதையில் தான் பயணிக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார்.

ஒருவகையில் இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது இருக்கும் காங்கிரஸ் தேசிய சிந்தனை கொண்ட கட்சி அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சி. எனவே கடந்த இரு மக்களவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் காங்கிரஸை மக்கள் நிராகரித்தார்கள். இனி வரும் தேர்தல்களிலும் நிராகரிப்பார்கள்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:நவராத்திரி விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3000 பொம்மைகளை கொண்டு பிரம்மாண்ட கொலு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.