பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
இதன்மூலம் இந்த பணிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 27, 28, 29ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் மாநிலம் முழுவதும் 154 மையங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்களில், ஒரு லட்சத்து46 ஆயிரத்து 580 பேர் எழுதினர். மீதமுள்ள 37ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செப்டம்பர் 30ஆம் தேதி தேர்வர்களின் விடைத்தாள் மற்றும் அவர்கள் அளித்த விடைகளை அவர்கள் பார்வையிடும் வகையில் வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது 12பாடத்திற்கான மதிப்பெண்களை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு செப்டம்பர் 27 ,28, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தற்பொழுது 12 பாடங்களுக்கான மதிப்பெண்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்பியல், தாவரவியல் ,உடற்கல்வியியல், புவியியல், மனை அறிவியல், இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உயிர்வேதியியல், வணிகவியல், தமிழ், மைக்ரோ பயோலாஜி ஆகியவை அடங்கும். இந்தப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை www.trb.tn.nic என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2144 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இப்போ எப்படி காப்பி அடிக்கரானு நானும் பார்க்கறேன்!