ETV Bharat / state

முக்கிய நகரங்களுக்கு குறைந்த விலையில் சரக்குகளை கொண்டு செல்ல புதிய 'ஆப்ட்ரூட்' செயலி: சென்னை ஐஐடி சாதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 9:40 PM IST

சென்னை ஐஐடி-யின் 'ஆப்ட்ரூட்' செயலி
சென்னை ஐஐடி-யின் 'ஆப்ட்ரூட்' செயலி

Madras IIT: நகரங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல உதவும் வகையில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் 'ஆப்ட்ரூட்' (OptRoute) என்ற மொபைல் செயலியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆசிரிய உறுப்பினர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து நகரங்களுக்கு இடையே சரக்குகளை எளிதாகவும் திறமையாகவும் கொண்டு செல்வதற்கு உதவும் மொபைல் செயலியை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். 'ஆப்ட்ரூட்' (OptRoute) என்றழைக்கப்படும் இந்த மொபைல்போன் செயலியானது கமிஷனோ, ஆன்போர்டிங் கட்டணமோ ஏதுமின்றி ஓட்டுநரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.

  • @iitmadras researchers have developed OptRoute mobile app for efficient inter-city transportation of goods. It's deployed in 21 Indian cities & is available on Google Play Store. pic.twitter.com/3CAu0Ak284

    — IIT Madras (@iitmadras) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இடைத்தரகர்கள் யாருமின்றி நுகர்வோரிடம் இருந்து பணம் நேரடியாக ஓட்டுநருக்கு சென்றுவிடும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் என்.எஸ்.நாராயணசுவாமி, ஐஐடி முன்னாள் மாணவர் திரு.அனுஜ்ஃபுலியா ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆப்ட்ரூட் லாஜிஸ்டிக்ஸ் மூலம் செயலியின் முதல் பதிப்பு உருவாக்கப்பட்டு வணிகமயமாக்கப்பட்டது.

இந்த செயலியின் அடிப்படைக் கருத்துகள் மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் நடைபெற்ற 2020 மரபணு மற்றும் பரிணாமக் கணக்கீடு மாநாட்டில் (https://doi.org/10.1145/3377930.3389804) முன்வைக்கப்பட்டன. பேக்கிங், வாகன இடத்தை திறமையாகக் கையாளும் முறை போன்ற அம்சங்களையும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. போதிய அளவுக்கு ஆரம்பகட்ட செயல்பாடுகள் நடைபெற்றதும் இவை செயலியில் சேர்க்கப்பட்டுவிடும்.

இந்த செயலி தீர்க்கக் கூடிய பிரச்சனைகள் குறித்து ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் நாராயணசுவாமி கூறும்போது, "ஆப்ட்ரூட் செயலியானது சரக்கு ஏற்றுதல் மற்றும் போக்குவரத்துக் களத்தில் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள இணைப்பில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

திரும்பி வர ரிடர்ன் லோடு கிடைக்காமல் இருப்பது, வாகனத் திறனை குறைவாகப் பயன்படுத்துவது ஆகியவை டிரான்ஸ்போர்ட் நடத்துவோர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளாகும். தற்போதைய சந்தையில் இதன் செயல்பாடுகள் மிகவும் ஒழுங்கமைப்பின்றி குறைந்த பயன்பாட்டுடன் இருந்துவருகிறது. தேசிய தளவாடக் கொள்கை- 2022ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஈடுபடுத்துவது அவசியமாகிறது" எனக் குறிப்பிட்டார்.

திரு.ஆப்ட்ரூட் லாஜிஸ்டிக்ஸ் இணை நிறுவனரும், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவருமான அனுஜ்ஃபுலியா கூறுகையில், "வாடிக்கையாளர்களையும் ஓட்டுநர்களையும் இணைக்கும் வகையில் எளிமையான மொபைல் செயலியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவைகளையும் ஆப்ட்ரூட் பயன்படுத்தாது. செயல்பாட்டுச் செலவு மிகக் குறைவாக இருப்பதால், கமிஷன் தொகை ஏதுமின்றி சேவையை வழங்குகிறோம். இதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்களும் தற்போதைய மாணவர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள் எங்கள் சேவையை 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கச் செய்வோம்" என்றார்.

ஆப்ட்ரூட் செயலியில் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர் என்ற இரு பயனர் முறைகள் உள்ளன. எந்த சரக்குப் போக்குவரத்து நிறுவனத்திடம் எந்த வாகனம் தேவை என்பதை பயனர் முறையில் (Customer mode) வாடிக்கையாளர் தெரிவிக்கலாம். தங்களுக்கு வந்துள்ள கோரிக்கைகளைக் கவனித்து ஓட்டுநர் பயனர் முறையில் (Driver mode) அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். ஆப்ட்ரூட்டுக்கும் ஏற்கனவே உள்ள சேவைகளுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகள் பின்வருமாறு.

பரிவர்த்தனைக்கு ஜீரோ கமிஷன், குறைந்த சந்தா தொகை அடிப்படையிலான சேவை நுகர்வோரிடமிருந்து ஓட்டுநருக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் முறை, மென்பொருள் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் உயர்தரம், டிரைவர், வாடிக்கையாளர் ஆகிய இருவருக்கும் ஒரே செயலி ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் கிடைக்கும் ஆப்ட்ரூட் (OptRoute) செயலியை கூகுள் பிளேஸ்டோர் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.

அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, பரிதாபாத், குருகிராம், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், நொய்டா, பஞ்ச்குலா, புனே, மொஹாலி, சூரத், ஜீரக்பூர் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்பட்டு இந்த செயலி தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் கார் விபத்து: சகோதரர்கள், புதுமாப்பிள்ளை உட்பட 4 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.